இலங்கைக்கான கனடா உயர்ஸ்தானிகருக்கும் - யாழ் கிளி நொச்சி முஸ்லிம் பேரவை நிர்வாகச் செயலாளருக்கும் இடையில் விசேட கலந்துரையாடல்


லங்கைக்கான கனடா உயர்ஸ்தானிகருக்கும் டேவிட் மக்னொனிற்கும் - யாழ் கிளிநொச்சி முஸ்லிம் பேரவையில் நிர்வாகச் செயலாளர் செல்வன் என்.எம். அப்துல்லாஹ்விற்கும் இடையில் விசேட சந்திப்பு ஒன்று கடந்த 4ஆம் திகதி பலாலி வீதியில் உள்ள திண்ணை விருந்தினர் விடுதியில் இடம்பெற்றது.
இச் சந்திப்பில் பல்வேறு விடயங்கள் தொடர்பில் கருத்துப்பரிமாற்றங்கள் இடம்பெற்றது.
உயர்ஸ்தானிகர் சந்திப்பில் முதலில் ஏப்ரல் 21 ஆம் திகதி குண்டுத்தாக்குதல் குறித்தும் அதன் பின்னரான யாழ் மாவட்ட முஸ்லிம்களின் நிலைமை தொடர்பிலும் வினவினார்.
அதற்கு நிர்வாகச் செயலாளர் பதிலளிக்கையில் முஸ்லிம்கள் பயங்கரவாதத்திற்கு எதிரானவர்கள் என்றும், குறித்த பயங்கரவாத குழுவினரை ஆதரிக்கவில்லை என்றும், அவர்களை நிராகரிக்கின்றோம் என்று குறிப்பிட்டதுடன், நாட்டின் பல பாகங்களிலும் முஸ்லிம் மக்கள் மேற்கொண்ட பயங்கரவாதத்திற்கு எதிரான நிலைப்பாட்டை யாழ்ப்பாணம் முஸ்லிம்களும் கடந்த 31 ஆம் திகதி வெள்ளிக்கிழமை நடாத்தியிருந்தமையை சுட்டிக்காட்டியிருந்தார்.

மேலும் முஸ்லிம் மக்கள் தொடர்பில் உறுதிப்படுத்தப்படாத செய்திகளை வெளியிட்டு வடக்கு கிழக்கில் உள்ள தமிழ் பேசும் மக்களுக்கு மத்தியில் பிளவுகளை உருவாக்க நினைக்கும் ஒரு சில ஊடகங்கள் குறித்தும் ஒரு சில இனவாதிகள் குறித்தும் கடந்த மாத இறுதிப்பகுதியில் ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றை நடாத்தியிருந்ததுடன், அதில் சிவில் சமூக அமைப்புக்களின் பிரதிநிதியாக யாழ் கிளி நொச்சி முஸ்லிம் பேரவையின் நிர்வாகச் செயலாளராக அவரால் முன்வைக்கப்பட்ட கருத்துக்கள் தொடர்பிலும் தெளிவுபடுத்தியிருந்தார். குறித்த ஊடக சந்திப்பில் குறிப்பிட்டதற்கமைவாக வடக்கு கிழக்கில் உள்ள தமிழ் பேசும் மக்களை பிளவுபடுத்த மேற்கொள்ளும் சதித்திட்டங்கள் குறித்தும் தெளிவுபடுத்தியதுடன், அவ்வாறு பிளவுபடுத்துவது என்பது முடியாத விடயம் என்ற கருத்தை உறுதிப்பட முன்வைதார்.
அவரது கருத்தை உயர்ஸ்தானிகர் வரவேற்றதுடன், குறித்த ஊடக சந்திப்பையும், கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தையும் உரிய காலப்பகுதியில் செய்திருக்கின்றீர்கள் என்றும் வாழ்த்து கூறினார்.

தொடர்ந்தும் இப் பயங்கரவாத தாக்குதலினால் யாழ்ப்பாணத்திலே அரச பாதுகாப்புத் தரப்பினரால் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கைகளுக்கு யாழ்ப்பாணம் முஸ்லீம் சமூகம் முழுமையான ஒத்துழைப்புக்களை வழங்கியிருந்ததாகவும், ஆயினும் பள்ளிவாயில்களில் சோதனை நடவடிக்கைகளின் போது சப்பாத்துக் கால்களுடனும், மோப்ப நாய்களுடனும் தேடுதல் மேற்கொண்டமை தமக்கு மிகுந்த கவலையை ஏற்படுத்தியிருந்தது என்றும் இது குறித்து உரிய யாழ் இராணுவத்தலைமையக பிரதானிகளின் கவனத்திற்கும் கொண்டு சென்றுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
மேலும் யாழ் மாவட்டத்திலே முஸ்லிம்கள் செறிந்து வாழும் பிரதேசங்களான யாழ் நகர், பருத்தித்துறை, நெய்னாதீவு, மண்கும்பான், சாவகச்சேரி போன்ற பிரதேசங்களை பயங்கரவாத அடையாளப்படுத்தல்கள் உள்ளதான மாயையை தோற்றுவிற்கும் வகையில் சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தமை தமக்கு மிகுந்த வருத்தமளிக்கும் செயற்பாடாக காணப்பட்டது. இது எதிர்காலத்தில் எமது சமூகத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் செயற்பாடுகளாகும். இது குறித்து ஊடகங்கள் மிகுந்த அவதானமாக செயற்பட வேண்டும் என்ற தமது தாழ்மையான கோரிக்கையை ஊடகங்களிடம் முன்வைத்திருக்கின்றோம் என்றும் குறிப்பிட்டார்.
மேலும் தற்போதைய நிலை குறித்து உயர்ஸ்தானிகர் வினவியதற்கு பதிலளிக்கையில், யாழ்ப்பாணத்திலே சொற்பமாக வாழ்கின்ற முஸ்லீம்கள் தமிழ் சகோதரர்களுடன் ஒன்றிதத்து வாழத்தான் விரும்புவதாகவும், எம்மை பிரிப்பதற்கு பல்வேறு தரப்பினரும் முயற்சித்து வருவதாகவும், ஒரு போதும் அவ்வாறான நடவடிக்கைகள் வெற்றியளிக்கப் போவதில்லை என்றும் குறிப்பிட்டார்.
மேலும் ஏப்ரல் 21 இற்குப் பிறகு பல்வேறு வகையிலும் பாடசாலை முஸ்லிம் பெண் மாணவிகள், பெண்கள் சந்தை, பொது இடங்கள், பாடசாலைகள் எனப் பல அசௌகரியங்களுக்கு முகம்கொடுத்துள்ளமை தொடர்பாகவும், தற்பொழுது அச்சூழ்நிலை சாதாரண நிலைக்கு வந்திருப்பதாகவும் குறிப்பிடப்பட்டது. அத்துடன் வர்த்தக நிலையங்களில் வியாபார நடவடிக்கைகளிலும் பல்வேறு பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளதாகவும், பல வர்த்தக நிலையங்களில் வர்த்தகர்கள் பலவிதமான பிரச்சினைகளை எதிர்கொள்கின்ற நிலைமை தொடர்பிலும் இதன் போது விளக்கப்பட்டது.

நல்லிணக்கம் மற்றும் ஆவணப்படுத்தலுக்காக முன்னெடுக்கப்பட்ட முயற்சிகள் குறித்து உயர்ஸ்தானிகர் வினவியதற்கு யாழ் கிளிநொச்சி முஸ்லிம் பேரவையின் நிர்வாகச் செயலாளராக இருக்கின்ற நான் முஸ்லீம் சமூகத்தின் இருப்பையும், வரலாற்றையும் ஆவணப்படுத்தும் முகமாக சமூக சிற்பிகள் நிறுவனத்தின் அனுசரைணயுடன் மௌனவலிகளின் வாக்குமூலம் எனும் புத்தகத்தில் யாழ்ப்பாணம் முஸ்லிம் எதிர் கொண்ட பிரச்சினைகள் குறித்தும், 1990 வெளியேற்றம் குறித்தும் ஒரு கதை ஒன்றை எழுதியிருப்பதாகவும், அதில் தமிழ், முஸ்லீம், சிங்களம் என மூவின மக்களுக்கு மத்தியில் மூன்று இனங்களும் அனுபவித்த கசப்பான உண்மை வரலாற்றை கதைகளாக தொகுத்திருப்பதாகவும், அந் நூல் தமிழ், ஆங்கிலம் மற்றும் சிங்கள மொழிகளில் வெளியிடப்பட்டிருப்பதாகவும் குறிப்பிட்டார். மேலும் அதன் இரண்டாம் பதிப்பு இந்தியாவின் தமிழ் நாட்டில் கடந்த வருடம் மார்ச் மாதமளவில் வெளியிடப்பட்டதாகவும் குறிப்பிட்டார்.
குறித்த செய்தியை கேட்ட உயர்ஸ்தானிகர் மிகவும் நல்லதொரு படைப்பு எனவும், மூவின மக்களினதும் பிரச்சினைகளை மூம்மொழியிலும் தொகுத்திருப்பது சிறப்பு எனவும், இவ்வாறான நடவடிக்கைகளே எதிர்காலத்தில் நல்லிணக்கத்திற்கான புரிதல்களை ஏற்படுத்தும் எனவும் குறிப்பிட்டார். அடுத்த சந்திப்பில் நூலின் பிரதியை சமர்பிப்பதாக குறிப்பிடப்பட்டது.
இவ்வாறாக பல்வேறு விடயங்களுடன் சுமார் 1 மணிநேரம் இச் சந்திப்பு இடம்பெற்றது.

தகவல் :- என்.எம். அப்துல்லாஹ் - யாழ் முஸ்லிம் சிவில் சமூகப் பிரதிநிதி

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -