எச்.எம்.எம்.பர்ஸான்-
வாகனங்களை பிரதேச ரீதியாக அடையாளம் கண்டு கொள்வதற்காக ஸ்டிக்கர் ஒட்டும் நிகழ்வு இன்று (15) புதன்கிழமை ஓட்டமாவடியில் இடம்பெற்றது.
கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபை எல்லைக்குள் பதிவு செய்யப்பட்ட வேன் மற்றும் முச்சக்கரவண்டி ஆகிய வாகனங்களுக்கு குறித்த பாதுகாப்பு ஸ்ரிக்கர்கள் ஒட்டி வைக்கப்பட்டது.
நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையில் வெளிப் பிரதேசங்களுக்குச் செல்லும் வாகனங்களை பாதுகாப்புப் பிரிவினர் அடையாளம் கண்டு கொள்வதற்காக இவ்வாறான திட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், இத்திட்டமானது குறித்த பகுதிகளில் ஒவ்வொரு வருடமும் இடம்பெறுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் ஓட்டமாவடி பிரதேச சபையின் தவிசாளர் ஐ.ரீ.அஸ்மி தெரிவித்தார்.
ஓட்டமாவடி பிரதேச சபை தவிசாளர் ஐ.ரீ.அஸ்மி அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அதிதிகளாக வாழைச்சேனை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன, பிரதேச சபை செயலாளர் எஸ்.எம்.சிஹாப்தீன், பிரதம முகாமைத்துவ உதவியாளர் ஏ.அக்பர் மற்றும் நிருவாக, வருமானவரி உத்தியோகத்தர்கள், வேன், முச்சக்கரவண்டி சங்கங்களின் உறுப்பினர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.