கட்டார் நாட்டின் உயர்மட்டக் குழுவினருக்கு மூன்று நாட்களுக்கு நடைபெறவுள்ள, இலங்கையிலுள்ள உள்ளூராட்சிமன்ற நிர்வாக முறைமையினை எடுத்துரைக்கும் நிகழ்ச்சித்திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு இன்று (29) வெள்ளிக்கிழமை இலங்கை உள்ளூர் ஆளுகை நிறுவகத்தின் கேட்போர்கூடத்தில் நடைபெற்றது.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவரும் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் பிரதம அதிதியாக கலந்துசிறப்பித்த இந்நிகழ்வில் சமூக வலுவூட்டல் இராஜாங்க அமைச்சர் செயிட் அலி ஸாஹிர் மௌலானா, உள்ளக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் எச்.டி. கமல் பத்மசிறி, இலங்கை உள்ளூர் ஆளுகை நிறுவகத்தின் தலைமை நிர்வாக அதிகாரி எம்.எஸ்.எம். றிஸ்மி, தேசிய சூரா சபை பொதுச் செயலாளர் அஸ்சேக் இனாமுல்லா மஸீஹூத்தீன், கட்டார் அரச உயர் அதிகாரிகள், கட்டார் நாட்டின் மாநகர சபைகளின் முதல்வர்கள், இலங்கையிலுள்ள கட்டார் நாட்டின் தூதரக அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
இதன்போது இராஜாங்க அமைச்சர் ஹரீஸ் மற்றும் கட்டார் நாட்டின் உயர்மட்டக் குழுவினருக்கும் ஞாபகச் சின்னங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.