ஜும்ஆ தொழுகையைத் தொடர்ந்து தங்களது கோரிக்கைகள் அடங்கிய பதாதைகளை ஏந்தியவாறு பள்ளிவாசலின் முன்னால் இருமருங்கிலும் நின்றவாறு அணிவகுத்து நின்றனர்.
பின்னர் பள்ளிவாசல் வளாகத்தில் அமைந்துள்ள மக்கள் பணிமனையில் ஊடக சந்திப்பு இடம்பெற்றது. இங்கு கருத்துத் தெரிவித்த சாய்ந்தமருது – மாளிகைக்காடு ஜும்ஆப் பெரிய பள்ளிவாசலின் தலைவர் வை.எம்.ஹனிபா, குறித்த தங்களது போராட்டமானது இன்றோடு நிறைவடையும் போராட்டம் அல்லவென்றும் இது கல்முனை மக்களுக்கு எதிரானது அல்ல என்றும் போலிவாக்குறுதிகளை வழங்கி அவர்களது வாக்குகளைச் சூறையாடி வாக்களித்த மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றாமல் இருப்பவர்கள் தங்களது வாக்குறுதிகளை நிறைவேற்றுங்கள் என்பதை அழுத்தும் போராட்டமே இது என்றும் தெரிவித்தார்.
சாய்ந்தமருது மக்கள் புதிதாக ஒன்றைக் கோரவில்லை என்று தெரிவித்த ஹனிபா, ஏற்கனவே இருந்த ஒன்றையே கோருவதாகவும் தெரிவித்தார். அபிவிருத்தி என்ற மாயையைக் காட்டி சாய்ந்தமருது மக்களின் நியாயமான கோரிக்கையை மலினப்படுத்தவேண்டாம் என்றும் இந்த மக்களின் கோரிக்கையை நிறைவேற்றி விட்டு அபிவிருத்தி மட்டுமல்ல தங்களது அரசியலையும் தாராளமாக செய்யலாம் என்றும் சாய்ந்தமருது மக்கள் 20000 வாக்குகளையும் தருவார்கள் என்றும் தெரிவித்தார்.
சாய்ந்தமருது மக்கள் மிகவும் பண்பானவர்கள் என்றும் அவர்களது உணர்வுகளுடன் உரசிப்பார்க்க வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டார். போலிவாக்குறுதிகளால் ஏமாற்றப்பட்ட பல ஊர் மக்கள் தங்களுடன் உரையாடிவருவதாகவும் அவர்களையெல்லாம் இணைத்துக்கொண்டால் அம்பாறையில் தங்களால் புதிய புரட்சியை ஏற்படுத்த முடியும் என்றும் தெரிவித்தார்.