- ஆறுமுகன் தொண்டமான் தெரிவிப்பு
க.கிஷாந்தன்-கூட்டு ஒப்பந்தத்தில் தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய நிலுவை கொடுப்பனவை பெற்றுக்கொள்வதில் பல தடைகள் உள்ளது. இத் தடைகளை இல்லாமல் ஆக்குவதற்கு எல்லோருடைய பங்களிப்பும் கிடைத்தால் நிச்சயமாக நிலுவை கொடுப்பனவு தொழிலாளர்களுக்கு பெற்றுக் கொடுக்க முடியும் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஆறுமுகன் தொண்டமான் தெரிவித்தார்.
வீறுகொண்டெழுவாய் பெண்ணே புதுயுகம் காண்போம் என்ற தொனிப்பொருளின் கீழ் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் மகளிர் தின விழா 10.03.2019 அன்று மாலை அட்டன் டி.கே.டபிள்யூ கலாச்சார மண்டபத்தில் வெகு விமர்சையாக இடம்பெற்றது.
இந்த நிகழ்வில் அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது,
1992ம் ஆண்டு முதல் கூட்டு ஒப்பந்த பேச்சவார்த்தை நடத்தி வருகின்றோம். முதல் சம்பளமாக சத கணக்கில் ஆரம்பித்து அதன் பிறகு ரூபா கணக்கிலும், தற்போது நூறு ரூபா கணக்கிலும் பெற்று வருகின்றோம். சில காலங்களில் பேச்சுவார்த்தை இழுபறியான நிலையில் இருந்த போதிலும் தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய நிலுவை கொடுப்பனவை பெற்றுக் கொடுத்தோம்.
கடந்த காலத்தில் நாங்கள் பேச்சுவார்த்தை நடத்தி வந்த போது, சிலர் இடைக்கால கொடுப்பனவு என கூறி நூறு ரூபாய் வீதம் பெற்றுக் கொடுத்தார்கள்.
அன்று நான் மஸ்கெலியா பகுதிக்கு சென்ற போது மக்கள் என்னிடம் கூறினார்கள். கொடுத்த நூறு ரூபாய் பணத்தையும் தோட்ட நிர்வாகம் அறவிட்டு கொண்டதாக சுட்டிக்காட்டினார்கள். இவர்கள் வாங்கி கொடுத்த கொடுப்பனவுகள் காரணமாக 88,000 ரூபா மக்களுக்கு கிடைக்காமல் போய்விட்டது.
இம்முறை கூட்டு ஒப்பந்தத்தின் போது மூன்று மாதம் பேச்சுவார்த்தை நடத்தி வந்தோம். ஆயிரம் ரூபாய் கிடைக்காவிட்டால் 30ம் திகதி எனது பதவியை இராஜனமா பன்னுவேன் என கூறினேன்.
தீடிரென அரசாங்கம் மாறியது. புதிய பிரதமராக வந்தவரிடம் இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்திய பொழுது அவர் இதனை தருவதாக கூறினார்.
இருந்தபோதிலும் பேச்சுவார்த்தை நடந்துக் கொண்டிருந்த பொழுது நான் 9 நாள் போராட்டம் செய்ய மக்களை அழைத்தேன். நீங்கள் முழு ஆதரவு ஒத்துழைப்பு வழங்கினீர்கள். இதன்போது சிலர் ஆதரவு வழங்குவதாக வந்தார்கள். ஆனால் அந்த ஆதரவு நேர்மையான மனம் சுத்தமானது அல்ல என தெரிந்துக் கொண்டேன்.
போராட்டத்தின் 9வது நாள் இவர்களால் அரசாங்க சொத்துகளுக்கு சேதம் விளைவித்தல், விடுதிக்கு செல்லும் நீரினை துண்டித்தல், சொத்துகளுக்கு ஆபத்து ஏற்படுத்துதல், அரசாங்கம் சொத்துகளுக்கு சேதம் விளைவிக்கின்றது போல் ஆர்ப்பாட்டத்தை திசை திருப்பி இதையெல்லாம் செய்தது காங்கிரஸ் என குற்றம் சுமத்தினார்கள்.
அதன் காரணமாக நான் இந்த போராட்டத்தில் இருந்து நான் விலகி கொண்டேன். வந்தவர்கள். இதயசுத்தியுடன் இருந்திருந்தால் ஆயிரம் ரூபாய் அல்ல. 1200 ரூபாய் பெற்றிருக்கலாம்.
எமது மக்களுக்கு 50 ரூபாய் வாங்கி கொடுத்தால் அதற்கு இ.தொ.கா முழு பங்களிப்பினை செய்யும். 50 ரூபாய் அரசாங்கம் கொடுக்காவிட்டால். அரசாங்கத்திற்கு எதிராக என்ன செய்ய வேண்டுமோ அதை செய்ய நாங்கள் தயாராக உள்ளோம்.
எமது மக்களுக்கு கிடைக்க வேண்டிய அனைத்து உரிமைகளும் கிடைக்க வேண்டும். எமது மக்களுக்கு கிடைக்க வேண்டிய 50 ரூபாய்க்கு நான் பெயர் போட வேண்டிய அவசியமில்லை. இப்போது யாராவது வாங்கி கொடுக்க நினைத்தால் அவர்களுடன் சேர்ந்து ஆதரவு வழங்க தயார்.
தொண்டமான் எதனை வாங்கி கொடுத்தார் என சிலர் கேள்வி எழுப்புகின்றனர். சிலர் 20 ரூபாயா என தெரிவிக்கின்றனர். 33,000 ரூபாயாக இருந்த தொழிலாளர்களின் பிரசவ விடுமுறைக்கான கொடுப்பனவு 60,000 ரூபாயாக உயர்த்தியுள்ளேன்.
20 ரூபாயுடன் இன்னும் 20 ரூபாய் சேர்த்து வாங்கி கொடுத்திருந்தால் பிரசவ விடுமுறை கொடுப்பனவு ஒரு இலட்சம் ரூபாவாக மாறிருக்கும்.
ஒரு தொழிலாளரி ஓய்வு பெரும் போது தோட்ட நிர்வாகத்தினால் வழங்கப்படும் சேவை கால பணம் 500 ரூபாவில் கடந்த காலங்களில் கணக்கு முடித்தார்கள். தற்போது 700 ரூபாயிலிருந்து கணக்கு முடிக்க வேண்டும்.
இ.தொ.கா அடிப்படை உரிமைகளை பெற்றுக்கொடுக்க முயல்கின்றது. கடந்த காலங்களில் தோட்ட தொழிலாளர்கள் தொழில் செய்யும் இடத்தில் குளவி கொட்டுக்கு இழக்காகுதல், விபத்துகள், சிறுத்தை தாக்கம் ஏற்படும் பொழுது அவர்களுக்கான உதவிகள் கிடைக்கப்பெறுவதில்லை.
தற்போது இவ்வாறான ஆபத்துகள் ஏற்படும் பொழுது வைத்தியரின் மூலம் வழங்கப்படும் கடிதத்தினை பெற்று தோட்ட நிர்வாகத்திடம் வழங்கினால் 5 நாட்களுக்கான சம்பளத்தை வழங்க வேண்டும்.
தற்போது தோட்ட தொழிலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை உடனடியாக தீர்த்து வைப்பதற்கு பிரச்சினை தீர்க்கும் குழு ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.
இக்குழுவில் பெருந்தோட்டதுறை சம்மேளனத்தின் அதிகாரிகள், பிராந்தியத்திற்கு பொறுப்பான அதிகாரிகள், தொழிற்சங்க அதிகாரிகள், தொழிலாளர்கள், சட்டதரணிகள் என பலரும் உள்ளனர்.
இவர்கள் ஊடாக பிரச்சினைகளை தீர்ப்பதற்காக வழிவகுப்பட்டுள்ளது என அவர் மேலும் தெரிவித்தார்.