காணி பதிவிற்கான விரைவான ஒருநாள் சேவை, சர்வதேச தரத்திற்கு இணைவான புதிய பாதுகாப்பு உத்திகளுடன் பிறப்பு, விவாக மற்றும் இறப்பு சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்ச்சித் திட்டத்தை மக்கள் மயப்படுத்தும் நிகழ்வு கல்முனை காணி மற்றும் மாவட்டபதிவகத்தின் ஏற்பாட்டில் இன்று (16) சனிக்கிழமை கல்முனை இருதயநாதர் மண்டபத்தில் கல்முனை காணிப் பதிவாளரும் மேலதிக மாவட்ட பதிவாளருமான இஸட். நஸீர்தீன் தலைமையில் நடைபெற்றது.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவரும் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்த இந்நிகழ்வில் கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம். றகீப், கல்முனை நீதி நிர்வாக பிரிவின் சட்டத்தரணிகள் சங்க தலைவர் சட்டத்தரணி எம்.எஸ்.கே.எம். சாரீக் காரியப்பர், அரசாங்க அதிபரின் பிரதிநிதியும் கல்முனை பிரதேச செயலாளருமான எம்.எம். நசீர், மேலதிக காணிப் பதிவாளரும் மேலதிக மாவட்டப் பதிவாளருமான ஜே.எம். பைறூஸ், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உயர்பீட உறுப்பினர் சிரேஷ்ட சட்டத்தரணி அன்சார் மௌலானா உள்ளிட்ட பிரதேச செயலாளர்கள், கல்முனை பிரதேச அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் தலைவர்கள், கிராம அலுவலர்கள், மேலதிக மாவட்ட பதிவாளர்கள், அபிவிருத்தி அலுவலர்கள், விவாக பிறப்பு இறப்பு பதிவாளர்கள் மற்றும் கல்முனை காணிப் பதிவக உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இதன்போது ஒருநாள் சேவையில் காணிப்பதிவுகள் மேற்கொள்ளப்பட்டு பத்திரங்கள் பிரதம அதிதியினால் வழங்கிவைக்கப்பட்டன.