கிழக்கு மாகாண வீடமைப்பு அதிகார சபைத் தலைவர் எம்.எஸ்.சுபைரின் முயற்சிக்கு வெற்றி.
கிழக்கு மாகாண ஆளுநர் கலாநிதிஎம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் ஏறாவூர் ஆதார வைத்தியசாலைக்கு 02 கோடியே 44 இலட்சம் ரூபா நிதி ஒதுக்கீடு செய்துள்ளார்.
முன்னாள் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சரும் கிழக்கு மாகாண வீடமைப்பு அதிகார சபையின் தலைவருமான எம்.எஸ். சுபைர் அவர்களின் அழைப்பின் பேரில் கிழக்கு மாகாண ஆளுநர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் ஆளுநராக பதவியேற்று முதன் முறையாக இன்று (24) ஏறாவூருக்கு வருகை தந்துள்ளார்.
கிழக்கு மாகாண வீடமைப்பு அதிகார சபைத் தலைவர் எம்.எஸ்.சுபைர் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க ஆளுநரினால் ஏறாவூர் ஆதார வைத்தியசாலைக்கு 02 கோடியே 44 இலட்சம் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அதன் முதற்கட்டமாக இன்று வைத்தியசாலைக்கு விஜயம் மேற்கொண்ட ஆளுநரிடம் வைத்தியசாலையில் காணப்படும் முக்கிய பிரச்சினைகளான இடப் பற்றாக்குறை, வைத்தியர்கள் பற்றாக்குறை, சுகாதார ஊழியர்கள் பற்றாக்குறை, மற்றும் வாகனத் தரிப்பிடம் இல்லாமை தொடர்பாக இந்நிகழ்வில் ஏறாவூர் ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டாக்டர் நாகலிங்கம் மயூரனால் முன்வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் கௌரவ அதிதியாக சமூக வலுவூட்டல் இராஜாங்க அமைச்சர் அலி ஸாஹிர் மௌலானா அவர்களும், விசேட அதிதியாக முன்னாள் உற்பத்தித் திறன் அமைச்சர் பஷீர் சேகுதாவூத் அவர்களும், சிறப்பு அதிதகளாக கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் ஏ.எச்.எம்.அன்சார் அவர்களும், மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர்
டாக்டர் எஸ்.அருள்குமரன் அவர்களும், மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் திருமதி என்.எம்.நவரட்ணராஜா அவர்களும், ஏறாவூர் நகர சபையின் தவிசாளர் ஐ.ஏ.வாசித் அலி அவர்களும், ஏறாவூர் பற்று பிரதேச சபையின் தவிசாளர் நாகமணி கதிரவேல் அவர்களும், ஏறாவூர்ப் பற்று பிரதேச சபையின் உறுப்பினர்களான எம்.எஸ்.ஜௌபர் எஸ்.எம்.கமால்தீன், எம்.எம்.சாஜித் ஆகியோரும் கலந்து கொண்டனர்.