எங்களுக்கிருக்கின்ற இருப்பையும், அரசியல் தலைமையையும் நாங்கள் பாதுகாத்தற்குப் பின்னர்தான் எங்களுடைய அபிவிருத்திகளை தொடந்தேர்ச்சியாக கண்டுகொண்டிருக்கின்றோம் என்று கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபையின் தவிசாளர் ஐ.ரீ.அஸ்மி தெரிவித்தார்.
மீராவோடை மேற்கு ஆற்றுக்கட்டுக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று (01) சனிக்கிழமை மீராவோடை மேற்கு வட்டாரக் குழுத் தலைவரும் முன்னாள் பிரதியமைச்சரின் இணைப்பாளருமான ஐ.எம்.றிஸ்வின் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
இந்தப் பிரதேசத்தில் கடந்த காலங்களில் நாங்கள் எங்களுடைய அரசியல் தலைமையை இழந்தபோது சுமார் ஐந்து வருட காலமாக நாங்கள் பட்ட அவதியும் கஷ்டங்களும் எங்களுடைய பிரதேசத்தில் கல்வி விடயத்திலும் எங்களுடைய பாடசாலை,பள்ளிவாயல்,கான், வீதிகள் போன்ற அனைத்து விடயங்களுக்கும் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு இந்தப் பிரதேசம் அபிவிருத்தி காணாமல் இருந்த வரலாற்றை நாங்கள் அனைவரும் கண்ணூடாகக் கண்டோம்.
இந்த மாவட்டத்தில் எங்களுடைய கல்குடா தொகுதிக்கு சுமார் ஐந்து கோடி ரூபாய்களை இந்த கம்பர்லிய வேலைத்திட்டத்தின்கீழ் 115 வேலைத்திட்டங்களை கடந்த மாதத்துக்குள் எங்களுடைய அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி அவர்கள் அடிக்கல் நாட்டுவதற்காக உத்தேசிக்கப்பட்டிருன்தது ஆனால் உங்களுக்குத் தெரியும் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற எங்களுடைய நாட்டின் அரசியல் சர்ச்சையின் பின்னால் இந்த வேலைத்திட்டங்களை செய்வதற்குரிய காலதாமதம் ஏற்பட்டது.
ஆரம்பிக்கப்பட்ட வேலைகள் அனைத்தையும் நீங்கள் அனைவரும் பிரதேச சபை, பள்ளிவாயல்கள், முக்கியஸ்தர்களைக் கொண்டு ஆரம்பிக்க வேண்டும் என்று கெளரவ அமைச்சர் அமீர் அலி அவர்கள் உடனடியாக எங்களுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
கடந்த காலங்களில் நாங்கள் அரசியலில் வாக்குக் கேட்கின்ற போது பொய்ப் பிரச்சாரங்களையும், அதைச் செய்து தருகிறோம், இதைச் செய்து தருகிறோம் என்று இந்தப் பிரதேசத்தில் மக்களை ஏமாற்றி அந்த மக்களுக்கு துரோகம் செய்து, பிரதேசங்களுக்கு வருகின்ற வேலைகளை நிற்பாட்டுவதற்காக நாங்கள் அரசியல் படிக்கவில்லை.
இந்த மாவட்டத்தில் ஒரு நல்ல அரசியல் தகப்பனின் பாசறையில் நாங்கள் வளர்க்கப்பட்டவர்கள் அரசியல் விடயங்களில் பொய் பேசுவது எங்களுக்குக் கிடையாது எங்களுடைய அரசியல் தலைமை அரசியல் தகப்பன் எங்களுக்கு சொல்லித்தந்த விடயமில்லை.
நீங்கள் பேசுங்கள் உங்களுடைய பிரதேசத்தில் இதை நாங்கள் செய்து தருவோம், இதை முடித்துத்தருவோம், இல்லையென்றால் முடியாது என்று முகத்தில் நீங்கள் விடயங்களைக் கூறி பொய் பேசாமல் உங்களுடைய பிரதேசத்தில் அபிவிருத்திப் பணிகளை ஆரம்பியுங்கள் என்ற அரசியல் பாசறைகளில் நாங்கள் வளர்க்கப்பட்டவர்கள் என அவர் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.