திருகோணமலை ரொட்டவெவ பகுதியில் காட்டு யாகைளின் தொல்லையினால் இரவு நேரங்களில் மக்கள் அச்சத்தில் உறங்குவதாகவும் அரச அதிகாரிகளுக்கு பல தடவைகள்
தெரியப்படுத்தியும் எதுவித நடவடிக்கைகளும் எடுக்க வில்லையெனவும் கிராமமக்கள் விஷனம் தெரிவிக்கின்றனர்.
மொறவெவ பொலிஸ் பிரிவிற்குற்பட்ட ரொட்டவெவ கிராமத்தில் ஒவ்வொரு நாளும் காட்டு யானைகளின் தொல்லை அதிகரித்து கொண்டு வருவதாகவும் இரவில் வீட்டிற்கு வௌியில் கூட வர முடியாத நிலை தோன்றியுள்ளதாகவும் சுட்டிக்காட்டுகின்றனர்.
அத்துடன் பாடசாலைக்கு செல்லும் மாணவர்கள் இரவு நேரங்களில் வகுப்புகளுக்காக செல்வதை நிறுத்தியுள்ளதாகவும், மார்க்க கல்வியை கற்கும் மக்தப் மற்றும் ஹிப்ழ் மத்ரஷா மாணவர்கள் அதிகாலை நேரங்களில் இடம் பெறுகின்ற மார்க்க வகுப்புகளளுக்குக்கூட செல்ல முடியாத நிலை தோன்றியுள்ளதாகவும் மாணவர்களின் பெற்றோர்கள் குறிப்பிடுகின்றனர்.
இதேவேளை காட்டு யானைகளின் அட்டகாசத்தினால் மா.பிலா மற்றும் வாழை மரங்களை அதிகளவில் சேதமாக்கி வருவதாகவும் மக்களுக்கு ஏதாவது அசம்பாவிதங்கள் ஏற்படுவதற்கு முன்னர் காட்டு யானைகளின் தொல்லைகளிலிருந்து பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் ரொட்டவெவ கிராமமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
