அகமட் எஸ். முகைடீன்-
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதி;த் தலைவரும் அரச தொழில் முயற்சி மற்றும் கண்டி நகர அபிவிருத்தி பிரதி அமைச்சருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸின் வேண்டுகோளுக்கு அமைவாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தேசியத் தலைவரும் நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சருமான சட்டமுதுமாணி ரவூப் ஹக்கீமின் பணிப்புரையில் அம்பாறை மாவட்டத்தில் நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சினால் இவ்வாண்டில் முன்னெடுக்கப்பட்ட வேலைத்திட்டங்கள் தொடர்பான மீளாய்வுக் கூட்டம் மருதமுனை சமூகவள நிலையத்தில் இன்று (25) திங்கட்கிழமை நடைபெற்றது.
இம்மீளாய்வுக் கூட்டத்தில் நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சின் மேலதிகச் செயலாளர் ஏ.சி.எம். நபீல், சுகாதார பிரதி அமைச்சர் பைசால் காசிம், கல்முனை மாநகர முதல்வர் ஏ.எம். றகீப், அட்டாளைச்சேனை பிரதேச சபை தவிசாளர் ஏ.எல். அமானுல்லா, சம்மாந்துறை பிரதேச சபை தவிசாளர் ஏ.எம்.எம். நௌசாட், நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சரின் இணைப்புச் செயலாளரும் கல்முனை மாநகர சபை உறுப்பினருமான ரஹ்மத் மன்சூர், கல்முனை மாநகர சபை ஆணையாளர் ஜே. லியாகத் அலி, கல்முனை மாநகர சபை பொறியியலாளர் ரி. சர்வானந்தன், அரச தொழில் முயற்சி மற்றும் கண்டி நகர அபிவிருத்தி பிரதி அமைச்சரின் இணைப்புச் செயலாளர்களான கல்முனை மாநகர சபை உறுப்பினர் எம்.எஸ்.எம். சத்தார், நௌபர் ஏ. பாவா, கல்முனை மாநகர சபை பிரதி முதல்வர் காத்தமுத்து கணேஷ், நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சின் உயர் அதிகாரிகள், உள்ளுராட்சி மன்றங்களின் உறுப்பினர்கள், ஒப்பந்தகார நிறுவனங்களின் பிரதிநிதிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.
இதன்போது நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சினால் அம்பாறை மாவட்ட பிரதேசத்தில் முன்னெடுக்கப்பட்ட அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் தொடர்பில் ஆராயப்பட்டது.
அந்தவகையில் குறித்த அமைச்சினால் முன்னெடுக்கப்பட்டு நிறைவடைந்த வேலைத்திட்டங்களில் தொடர் வேலைத்திட்டமாக முன்னெடுக்க வேண்டிய வேலைத்திட்டங்களை அடையாளப்படுத்தியதோடு நிறைவடையாமல் காணப்படும் வேலைத்திட்டங்களை துரிதப்படுத்தி முழுமைப்படுத்துவது தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டது.
