இனங்களுக்கிடையில் நல்லுறவையும் ஐக்கியத்தையும் ஏற்படுத்துகின்ற திருநாளாகவும் முஸ்லிம் சமூகத்தில் ஒற்றுமையை வலுப்படுத்துகின்ற நன்னாளாகவும் புனித நோன்புப் பெருநாள் அமையவேண்டுமென எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவரும் அரச தொழில் முயற்சி மற்றும் கண்டி நகர அபிவிருத்தி பிரதி அமைச்சருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் தனது பெருநாள் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
பிரதி அமைச்சர் ஹரீஸ் அவ்வாழ்த்துச் செய்தியில் மேலும் தெரிவிக்கையில், இன மத வேறுபாடுகள் இன்றி சகோதர வாஞ்சையோடு ஒரு தேசத்து மக்களாக ஒன்றிணைந்து வாழ்ந்து நாட்டின் பொருளாதாரத்தை வளர்ச்சியடையச் செய்வதற்கு அனைவரும் பங்காற்ற வேண்டும்.
இஸ்லாம் மார்க்கம் வலியுறுத்துகின்ற அனைத்து நற்செயல்களையும் ஞாபகப்படுத்தும் மாதமாக ரமழான் அமைகின்றது. அந்தவகையில் நோன்பு காலத்தில் புடம்போடப்பட்டு எம்மில் எற்படுத்தப்பட்ட நல்ல மாற்றங்கள் புனித நோன்புப் பெருநாள் தினத்தோடு விடைபெற்றுவிடாமல் எமது வாழ்நாள் முழுவதும் தொடர்வதற்கும் நோன்புகாலத்தில் செய்த நல்லமல்கள் இறைவனின் திருப்பொருத்தத்தைப் பெற்று மறுமையில் ஈடேற்றத்தை பெறுவதற்கும் இறைவன் அனைவருக்கும் அருள் புரிய பிரார்த்திப்பதாக பிரதி அமைச்சர் ஹரீஸ் தெரிவித்தார்.