ஏறாவூர் நகர சபையின் அனைத்து சுகாதார தொழிலாளர்கள், வேலையாட்கள் மற்றும் சாரதிகள் (30.05.2018) புதன்கிழமை இரண்டாவது தடவையாக நடாத்திய எதிர்ப்புப்போராட்டத்தின் பயனாக அதிகாரிகளினால் தீர்வு வழங்கப்பட்டதையடுத்து வேலை நிறுத்தம் தற்காலிகமாகக் கைவிடப்பட்டுள்ளது.
பத்து மாதகாலத்திற்கான இடர்கடன் கொடுப்பனவு, அமைய அடிப்படையிலான ஊழியர்களுக்கு உரிய காலத்தில் சம்பளம் வழங்கல்,
சுகாதார தொழிலாளர்களுக்கான சீருடை விநியோகம் ழூ தொழிலாளர்களை அவமதித்து தகாதவார்த்தையினால் பேசும்பழக்கமுடைய செயலாளரை இடமாற்றம் செய்தல் ஆகிய கோரிகைகளை முன்வைத்து கடந்த சனிக்கிழமையன்று வேலை நடைபெற்றதுடன் புதன்கிழமை திண்மக்கழிவு (குப்பைகள்) ஏற்பட்ட இயந்திரங்களினால் நகர சபையின் வாயிலை மறித்து ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன்போது அவ்விடத்திற்கு வருகைதந்த உள்ளுராட்சி உதவி ஆணையாளர் கே. சித்திரவேல் மற்றும் நகர சபை முதல்வர் ஐ. அப்துல் வாசித் ஆகியோர் தொழிலாளர்களது கோரிக்கைகளுக்கு செவிமடுத்ததுடன் சீருடை மற்றும் சம்பளக்கொடுப்பனவுகளை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுப்பதாகவும் செயலாளரை இடமாற்றம் செய்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பதாகவும் உறுதியளித்தனர். இதையடுத்து தொழிலாளர் போராட்டம் இடைநிறுத்தப்பட்டது.
இதற்கிடையே ஏறாவூர் நகர சபையின் செயலாளர் பிர்னாஸ் இஸ்மாயில் போராட்டம் நடாத்திய தொழிலாளர்களது முன்னிலைக்கு வந்து தான் அனைத்து ஊழியருடனும் அன்பாக, பண்பாகவே தொடர்பாடலைப் பேணுவதாகவும் அவ்வாறு தகாதவார்த்தைப்பிரயோகம் செய்திருந்தால் நேரெதிரே கூறுமாறும் கேட்டபோது- ஊழியர்கள் ஆவேசதத்துடன் விடயங்களைச் சுட்டிக்காட்டினர். அப்போது செயலாளர் மௌனம் காத்ததை அவதானிக்க முடிந்தது.
தமது போராட்டம் அரசாங்கத்திற்கெதிரானதல்ல, எங்களது உரிமைகளையும் சலுகைகளையும் கோரியே போராடுகின்றோம் என்றனர்.
நகரசபை முதல்வர் ஐ. அப்துல் வாசித் இங்கு கருத்துத் தெரிவிக்கையில்- செயலாளர் மற்றும் கணக்கு உதவியாளரது அசமந்தப்போகினாலேயே ஊழியர்களது சலுகைகள் உரிமைகள் மறுக்கப்படுகின்றன. நாங்கள் மக்கள் பிரதிநிதிகள் இச்சபையைப் பொறுப்பெற்ற பின்னர் கையாலாகாத சபையாக இதைக்காட்ட முயலுகின்றனர். அதற்கு இடமளிக்க முடியாது. மக்கள் பிரதிநிதிகள் இல்லாத காலத்தில் விசேட ஆணையாளராக கடமையாற்றிய தற்போதைய செயலாளர் இன்னும் தானே இச்சபைக்குத்தலைவர் எனக்காட்டமுயற்சி செய்வதாகக் கூறினார்.