கிழக்கு மாகாணத்தில் அனைத்து மக்களுக்கும் இன மத வேறுபாடின்றி சேவையாற்றவே நான் ஆளுநர் பதவியை பொறுப்பேற்றேன். மாகாணத்திலுள்ள அனைத்து பகுதிகளுக்கும் சென்று மக்களின் பிரச்சினைகளை இணங்கண்டு தீர்த்து வைப்பேன். பொதுமக்கள் தங்களது பிரச்சினைகளை முன் வைக்கமுடிமென கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித போகொல்லாகம தெரிவித்தார்.
அம்பாறை மாவட்ட மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக ஆராய்வதற்காக அம்பாறை நகர சபை கேட்போர் கூடத்தில் நடைபெற்ற மக்கள் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்தார்.
கிழக்கு மாகாணத்திலுள்ள மக்களின் பிரச்சினைகளை திருகோணமலை ஆளுநர் செயலகத்திற்கு வருகை தந்து கூற வேண்டிய நிலை ஏற்பட்டிருந்த போதிலும் மக்களுக்கு சிறந்த சேவையினை வழங்கும் நோக்கில் அம்பாறை,மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களிலும் மக்கள் சந்திப்புக்களை தொடர்ந்தும் நடாத்த திட்டமிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
அம்பாறை மாவட்டத்திலுள்ள வைத்தியசாலைகளின் அபிவிருத்திகள் தொடர்பாகவும், பாடசாலைகளின் அபிவிருத்திகள் தொடர்பாகவும் ,விவசாயிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாகவும் ஆராய்ந்து தீர்வுகள் வழங்கப்பட்டதுடன் சுகாதாரத்துறை மற்றும் கல்வித்துறைகளை கிழக்கு மாகாணத்தில் அபிவிருத்தியடையச்செய்யவுள்ளதாகவும், அதற்காக வேண்டி
பல திட்டங்களை முன்னெடுக்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இச்சந்திப்பின் போது கிழக்கு மாகாண ஆளுநர் செயலாளர் அசங்க அபேவர்தன ,ஆளுனரின் இணைப்புச்செயலாளர் நிமால் சோமரத்ன.உள்ளுராட்சி மன்ற உதவி எம்.ராஸீக் மற்றும் அம்பாறை மாவட்டத்தைச்சேர்ந்த அரச திணைக்கள அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டனர்.