பிறக்கும் இப்புத்தாண்டு இலங்கை வாழ் சமூகத்தினருக்கு வளமான வாழ்வும் குறைவற்ற செல்வமும், கிடைத்திட வேண்டுமென தனது வாழ்த்துக்களைப் பகிர்ந்து கொள்வதில் பெரும் மகிழ்ச்;சியடைகின்றேன் என மத்திய மாகாண விவசாய, இந்து கலாசார மற்றும் தமிழ் கல்வி அமைச்சர் மருதபாண்டி ரமேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
பிறந்திருக்கும் புத்தாண்டை முன்னிட்டு அவர் விடுத்துள்ள வாழ்த்து செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது இன, மத,மொழி,சாதி,சமய வேறுபாடுகளைக் கலைந்து எல்லோரும் ஒருதாய் மக்களென உலகறியச்செய்யும் சிறப்பு நாளாகும் இன்று. இப்புத்தாண்டில் மனிதம் நிரந்தரமாய் நிலைத்து புதிய சாதனைகளையும், வெற்றிகளையும் பெற்று வழிமறிக்கும் தடைகளைத் தகர்த்து மகிழ்ச்சி பொங்கும் நன்நாளாக யாவருக்கும் அமைய வேண்டும்.
நமது சமூகம் கல்வி, பொருளாதாரம், உட்கட்டமைப்பு உள்ளிட்ட அனைத்து வாழ்வியல் செயற்பாடுகளிலும் இன்னும் எழுச்சி கொள்ள வேண்டும். அதற்கு எங்களின் முயற்சி, அறிவு, ஆற்றல் என்பன பங்களிக்க வேண்டும். இவற்றை முன்னெடுத்து நாம் ஏனைய சமூகங்களுக்கு நிகரான சமூகமாக வாழ இவ்வருடத்தில் திடசங்கற்பம் கொள்வோமாக. இப்புத்தாண்டில் நமது பலம்,ஒற்றுமை என்பவற்றை நிலை நிறுத்தி எழுச்சி கொள்ளும் சமூகமாய் இன்புற்று வாழ்வதற்கு வழிசமைக்கட்டும் என்றார்.
