எம்.ரீ. ஹைதர் அலி-
அடுத்த வருடத்திற்கான முதலாவது பாடசாலை கட்டிட அபிவிருத்தியாக இப்பாடசாலைக்கான கட்டிடம் அமையும் என எதிர்பார்க்கின்றோம். - பொறியியலாளர் ஷிப்லி பாறுக்
நகர்ப்புறங்களிலுள்ள வளர்ச்சியடைந்த பாடசாலைகளினூடாக மாத்திரமே சிறந்த கல்வியினைப் பெற்றுக்கொள்ள முடியும் என்ற மனப்பதிவினை மாற்றியமைக்கும் விதமாக பின்தங்கிய பிரதேச பாடசாலை அபிவிருத்திப் பணிகளை முன்னுரிமைப்படுத்தி உயர் கல்வித்தரத்தினை முன்னெடுக்க செயற்பட்டு வருக்கின்றோம் என முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் மட்டக்களப்பு தொகுதி அமைப்பாளரும், ஸ்ரீ லங்கா ஷிபா பவுண்டேசனின் தலைவருமான பொறியியலாளர் ஷிப்லி பாறூக் தெரிவித்தார்.
முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக் அவர்களின் 2017ஆம் ஆண்டிற்கான பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டின் கீழ் காத்தான்குடி நூரானியா வித்தியாலயத்திற்கான போட்டோ கொப்பி இயந்திரம் கையளிக்கும் நிகழ்வு அண்மையில் நடைபெற்றது.
இந்நிகவில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்;
மாணவர்களின் கல்வியினை மேம்படுத்துவதனூடாக கல்வி கற்ற சிறந்த எதிர்கால சமூகம் ஒன்றினை உருவாக்கும் நோக்கில் நாங்கள் பல்வேறுபட்ட பாடசாலை அபிவிருத்தி செயற்றிட்டங்களை முன்னெடுத்து வருகின்றோம்.
குறிப்பாக பின்தங்கிய பிரதேசங்களிலுள்ள தேவையுடைய பாடசாலைகளை இனங்கண்டு அவற்றின் வளப்பற்றாக்குறைகளை நிவர்த்தி செய்யும் பல்வேறு நடவடிக்கைகளை கடந்த காலங்களில் முன்னெடுத்திருந்தோம்.
அந்தவகையில் இப்பாடசாலையில் நிலவும் இடவசதி பற்றாக்குறை காரணமாக இப்பாடசாலையிலுள்ள இரண்டு கட்டிடங்களை அகற்றிவிட்டு புதிதாக மூன்று மாடிக் கட்டிடம் ஒன்றினை அமைப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டு அதற்கான பரிந்துரைகளை மாகாண சபைக்கு சமர்ப்பித்திருந்தோம்.
எனவே அடுத்த வருடம் எமது பிரதேசத்தில் முன்னெடுக்கப்படுகின்ற முதலாவது பாடசாலை கட்டிட அபிவிருத்தியாக அவ்அபிவிருத்தித் திட்டம் அமையும் என எதிர்பார்க்கின்றோம்.
அது மாத்திரமல்லாமல் எதிர்காலத்திலும் இத்தகைய தேவையுடைய பாடசாலைகளை முன்னுரிமைப்படுத்தி பல்வேறு அபிவிருத்திச் செயற்றிட்டங்களை முன்னெடுப்பதனூடாக பின்தங்கிய பிரதேச மாணவர்களுக்கான அதியுயர் கல்வித்தரத்தினைக் பெற்றுக்கொடுக்க தொடர்ச்சியாக செயற்பட்டு வருகின்றோம் என தனது உரையில் பொறியலாளர் ஷிப்லி பாறூக் தெரிவித்தார்.