வாழைச்சேனை கோறளைப்பற்று பிரதேச செயலகப் பிரிவில் அபிவிருத்தி உத்தியோகத்தராக கடமையாற்றும் கே.சுகிர்தரன் என்பவர்; தாக்கப்பட்டுள்ளதைக் கண்டித்து செயலக உத்தியோகத்தர்கள் கறுப்பு பட்டியால் வாயை கட்டி செயலக முன்பாக எதிர்ப்பு ஆர்பாட்டத்தினை இன்று வெள்ளிக்கிழமை மேற்கொண்டனர்.
அபிவிருத்தி உத்தியோகத்தரை தாக்கிய மூவரும் கைது செய்யப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தி அவர்களுக்கு உரிய தண்டணை வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையின் நிமிர்த்தம் இரண்டு மணிநேரம் கடமை செய்யாமல் உத்தியோகத்தர்கள் போராட்டத்தை மேற்கொண்டனர்.
இதன்போது குற்றமிளைத்தவரை சட்டத்தின் முன் நிறுத்து, அரச சேவையாளரிடம் சேட்டை செய்யாதே, அரச உத்தியோகத்தரின் இருப்பை உறுதி செய், அரச உத்தியோகத்தர்களுக்கு அபகீர்த்தி செய்யாதே, மக்கள் சேவையாளனுக்கு மரியாதை வழங்கு, அரச சேவையின் தரத்தை உறுதி செய் என பல்வேறு வாசகங்களுடன் செயலக உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.
குறித்த இடத்திற்கு வருகை தந்த பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் உரிய நடவடிக்கை மேற்கொள்ள தான் நடவடிக்கை எடுப்பதாக என தெரிவித்தார்.
கிண்ணையடி துறையடி வீதியில் மீள்குடியேற்ற வீட்டுத் திட்டத்தில் தாயொருவருக்கு வழங்கப்பட்ட வீட்டின் தாய் மரணமடைந்துள்ளதால் அந்த வீட்டினை மரமடைந்தவரின் பிள்ளைகள் இருவர் தங்களுக்கு வேண்டுமென தனித்தனியே உரிமை கோரிய நிலையில் இவர்களது பிரச்சனைகளை தீர்ப்பதற்கு கிராம சேவை அதிகாரியுடன் அபிவிருத்தி உத்தியோகத்தரும் சென்ற வேளை தாக்கப்பட்டுள்ளனர்.
தாக்கப்பட்ட அபிவிருத்தி உத்தியோகத்தர் தலையில் காயம் ஏற்பட்ட நிலையில் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அபிவிருத்தி உத்தியோகத்தரை மரணமடைந்த தாயின் மகனும், பேரனும், மற்றுமொரு உறவினருமாக மூன்று பேர் சேர்ந்து தாக்குதல் நடாத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.