சபை கலைக்கப்பட்டு மாகாண நிர்வாகத்தை ஆளுநரின் கைகளுக்கு கொடுப்பதா அல்லது சபையை நீடிப்பதா

அனா-

லையவிருக்கின்ற மாகாணசபைகளைக் கலைத்துவிட்டு தேர்தலை தள்ளிப் போட்டு மாகாண நிர்வாகத்தை ஆளுநரின் கைகளுக்கு ஒப்படைத்தல் அல்லது மாகாணசபைகளைக் கலைக்காமல் காலநீடிப்புச் செய்தல் என்ற இரு விடயங்களின் மூலமே அரசினால் கொண்டு வரப்பட்ட தேர்தல் சீர்திருத்த 20 வது திருத்தத்தை மேற்கொள்ள முடியும். 

இதில் நாங்கள் எந்த விடயத்தை ஏற்றுக் கொள்வதென்ற கேள்வியே இருந்தது. என கிழக்கு மாகாண விவசாய அமைச்சரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளருமாகிய கிருஸ்ணபிள்ளை துரைராசசிங்கம் தெரிவித்தார்.

20வது திருத்தம் தொடர்பில் கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களால் மேற்கொள்ளப்பட்ட நடைமுறைகளை மக்களுக்கு தெளிவுபடுத்தும் வகையில் வெளியிடப்பட்ட ஊடக அறிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இவ்வறிக்கையில் தொடர்ந்து குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

அரசியல் அமைப்பின் 20வது திருத்தம் தொடர்பாக கிழக்கு மாகாண சபையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் நடந்து கொண்ட விதம் பற்றி பெரும்பாலான மக்களுக்கு நாங்கள் அளித்த விளங்கங்கள் தெளிவாக இருந்த போதிலும், சிலர் இது பற்றித் தெளிவற்ற கருத்துக்களைக் கூறி மக்களைக் குழப்ப முயற்சிப்பதனால் இவ்விடயம் பற்றி எமது கருத்துக்களை மீண்டும் தெளிவுபடுத்த விரும்புகின்றேன்.

20வது திருத்தம் தொடர்பாக நாங்கள் மிகவும் ஆழமாக ஆராய்ந்தோம். கடந்த ஓகஸ்ட் 25ம் திகதி இந்தப் பிரேரணை எமது மாகாணசபையில் முன்வைக்கப்பட இருந்தது. அதிலே பல தெளிவின்மைகள் இருந்ததன் காரணமாக அதனைச் சபைக்குக் கொண்டுவருவதில்லை என்று தீர்மானித்தோம். ஏனைய கட்சித் தலைவர்களுடனும் இது தொடர்பில் இணக்கத்தை ஏற்படுத்தினோம். மேலும் ஓகஸ்ட் 29, செப்டம்பர் 07 மற்றும் 11ம் திகதி பி.ப 01.30 மணிவரையிலான இந்த குறித்த காலப்பகுதிகளில் இந்தத் திருத்தம் தொடர்பில் மேலும் மேலும் ஆராயந்தோம். 11ம் திகதி பி.ப 01.30 மணிக்கு சபை கூடியதன் பின்புதான் இது தொடர்பில் எமது அபிப்பிராயத்தை ஆளுந்தரப்போடு இணைந்து வெளியிட்டோம்.

இந்தத் திருத்தம் தொடர்பாக எங்கள் முன்னே பல விடயங்கள் எழுந்தன. அரசாங்கம் இந்தத் திருத்தத்தைக் கொண்டு வருவதன் மூலம் மாகாணசபைகள், உள்ளுராட்சி சபைகள், மற்றும் பாராளுமன்ற தேர்தல்களில் அறிமுகப்படுத்த இருக்கின்ற புதிய கலப்புமுறைத் தேர்தல் முறைமை, இந்தவகையில் மாகாணசபைகளினுடைய வாக்களிப்புப் பிராந்தியங்கள் மாகாணசபை வட்டாரங்களாகவோ, தொகுதிகளாகவோ அல்லது வேறு ஏதேனும் வாக்களிப்புப் பிராந்தியங்களாகவோ மாற்றி அமைக்க இருக்கின்றமை, இவ்வாறான நோக்கத்தை அடைவதற்கு அமைப்பதற்கு தேவைப்படும் காலத்திற்கு அமைவாக எங்களது கிழக்கு மாகாணசபை உட்பட செப்டம்பர் மாதத்தில் கலைய இருக்கின்ற மாகாணசபைகளினுடைய காலத்தை நீடிக்கும் தேவை, இவ்வாறான சூழ்நிலையில் மாகாணசபைகளைக் கலைப்பதற்கு தற்போதைய ஏற்பாட்டில் மாற்றத்தைச் செய்தல் போன்ற விடயங்கள் தொடர்பில் எங்கள் முன்னே பல கேள்விகளும் விடைகளும் எழுந்தன.

இதிலே இறுதியாகக் கூறப்பட்ட மாகாணசபைகளின் கலைப்பு தொடர்பாக அரசாங்கம் அறிமுகப்படுத்த இருக்கின்ற மாற்றம் அதாவது மாகாணசபைகளைக் கலைக்கின்ற அதிகாரத்தை பாராளுமன்றத்திற்குக் கையளிப்பது என்பது மாகாணசபையின் அதிகாரத்தை பாராளுமன்றத்திற்குக் கையளிப்பதாக இருந்தது. இதற்கு நாங்கள் எவரும் உடன்படத் தயாரில்லை. எனவே இது தொடர்பான திருத்தம் ஒன்று செய்யப்பட வேண்டும். மாகாணசபைகளைக் கலைக்கின்ற அதிகாரம் தற்போது உள்ளபடியே இருக்கும் வகையில் அந்தத் திருத்தம் அமைய வேண்டும் என விரும்பினோம். ஏனைய தேர்தல் சீர்த்திருத்தம் தொடர்பான விடயங்களில் எங்களுக்கு உடன்பாடு இருந்தது.

இருப்பினும் இந்த விடயத்தை எய்துவதற்கான நடவடிக்கைகளை அரசு ஏற்கனவே எடுத்து இப்போது முடித்திருக்க வேண்டும், அது நடைபெறவில்லை. எனினும் இப்போதாவது செய்து முடிக்க வேண்டும் என்ற அவசியம் அரசிற்கு ஏற்பட்டிருக்கின்றது. இதற்காக கலைய இருக்கின்ற மாகாணசபைகளின் காலத்தை நீடித்து இவ்விடயத்தைச் சாத்தியமாக்க அரசு நினைக்கின்றது.

மேற்படி விடயத்தை அரசாங்கம் கலையவிருக்கின்ற மாகாணசபைகளைக் கலைத்துவிட்டு தேர்தலை தள்ளிப் போட்டு மாகாண நிர்வாகத்தை ஆளுநரின் கைகளுக்கு ஒப்படைத்தல் அல்லது மாகாணசபைகளைக் கலைக்காமல் காலநீடிப்புச் செய்தல் என்ற இரு விடயங்களின் மூலமே மேற்கொள்ள முடியும். இதில் நாங்கள் எந்த விடயத்தை ஏற்றுக் கொள்வதென்ற கேள்வி எழுந்தது. இதிலே இரண்டாவது தெரிவே எமக்குப் பொருத்தமாகத் தென்பட்டது. இது ஒருவகையில் மக்கள் வழங்கிய ஆணைக்கு மேலாகச் செயற்படுகின்ற ஒருசெயற்பாடுதான். இருப்பினும் மேற்குறித்த நிலைமைகளை ஆராயும் போது பொருத்தமாக இருப்பது இந்த விடயமே.

அத்தோடு இதற்கு இன்னும் மேலாக அடுத்த ஆண்டிலே மிக முக்கியமான இரண்டு நிகழ்வுகள் நடைபெற வேண்டுமென நாங்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றோம். தற்போது இடைக்கால அறிக்கை வரை முன்னேறி இருக்கின்ற அரசியல் அபை;புச் சட்டம் ஒரு முழுமையான உருவத்தைப் பெற்று பாராளுமன்றத்திலே மூன்றில் இரண்டு பெரும்பான்மையோடு நிறைவேற்றப்பட வேண்டும், அந்த அரசியல் அமைப்புச் சட்டம் மக்கள் தீர்ப்புக்கு வழங்கப்பட்டு அதிலே 50 வீதத்திற்கும் மேல் வாக்குகளைச் சாதகமாகப் பெற வேண்டும்.

இந்த முக்கியமான மக்கள் தீர்ப்பு வாக்கெடுப்புக்கு முன்னதாக நடைபெறுகின்ற தேர்தல்களில் இந்த அரசியல் அமைப்புச் சட்டத்திற்கு முழுமூச்சுடன் எதிராகச் செயற்படும் கூட்டு எதிர்க்கட்சி வெற்றி வாய்ப்புகளைப் பெறுகின்ற வாய்ப்பு ஏற்பட்டால் அது தென்பகுதியில் புதிய அரசியல் அமைப்புக்கான மக்கள் தீர்ப்பு வழங்கப்படும் போது பாதகமான சூழ்நிலையை ஏற்படுத்தும் எனவே இந்த அரசியல் அமைப்புக்கான மக்கள் தீர்ப்புக்கு முன்னதாக ஒரு தேர்தல் நடைபெறாமல் இருப்பது நல்லது என நாங்கள் விரும்பினோம்.

இத்தனைக்கும் மேலாக பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பெறுவதிலே முற்றுமுழுதாக பாராளுமன்ற ஆளுந்தரப்பே சாதகமாகச் செயற்பட வேண்டும். எம்மிடம் உள்ளது 16 வாக்குகள் மாத்திரமே மூன்றில் இரண்டு பெரும்பான்மை வாக்குகளில் ஆகக் குறைந்தது 150 வாக்குகளைப் பெறுவதாக இருந்தாலும் இறுதி 134 வாக்குகளை பெற்றுத் தர வேண்டியது ஜனாதிபதி மற்றும் பிரதமருடைய பெறுப்பகாக இருக்கின்றது. இதே போன்று மக்கள் தீர்ப்பின் போது மக்களை இதற்குச் சாதகமாக வாக்களிக்கச் செய்கின்ற பொறுப்பினையும் அரசே மேற்கொள்ள வேண்டும். அரசு மேற்படி பொறுப்புக்களுக்காக ரிஸ்க் (சுஐளுமு) எடுக்க இருக்கின்ற வேளையில் நாங்களும் இவ்வாறான ஒரு ரிஸ்கை எடுக்காமல் இந்தக் காரியத்தை நிறைவேற்ற முடியாது என சிந்தித்தோம்.

இந்த வகையிலே தான் கால நீடிப்பை ஓராண்டுக்கு மாத்திரம் மட்டுப் படுத்துவதற்கும், மாகாணசபையினுடைய கலைப்புச் செயற்பாடு தொடர்பில் பாராளுமன்றத்திற்கு கையளித்திருந்த ஏற்பாட்டினை திருத்துவதற்குமான திருத்தத்தை சட்டமா அதிபர் உயர் நீதிமன்றத்தில் சமர்ப்பித்திருந்தார். இந்த ஆவணம் உத்தியோகபூர்வமற்றதாக இருந்த போதிலும் 20வது திருத்தம் பாராளுமன்றத்தில் குழுநிலை விவாதத்தில் விவாதிக்கப்படும் போது சட்டமா அதிபர் முன்மொழிந்த திருத்தம் அதிலே உள்ளடக்கப்படும் என்ற உத்தரவாதம் இருந்தது.

இவற்றையெல்லாம் சீர்தூக்கிப் பார்த்து ஏற்கனவே குறிப்பிட்ட காலப்பகுதிகளில் மிக ஆழமாக ஆராய்ந்து ஆலோசனைகள் பெற்று புதிய அரசியல் அமைப்புக்கான மக்கள் திர்ப்பு, எமது மக்களின் எதிர்கால வாழ்வு என்பவற்றையெல்லாம் கருத்தில் எடுத்து மிக அவசியமானதொரு சேவைக்காக சில விதி விலக்குகள் நியாயப்படுத்தப்பட வேண்டும் என்ற அடிப்படையிலே தான் 20வது திருத்தச் சட்டத்தை திருத்தங்களோடு உள்ளடக்கிய விதத்திலே மாகாணசபை கன்சாட் அறிக்கையிலே பதிவு செய்து அதற்குச் சார்பான எங்களது அபிப்பிராயத்தை வெளியிட்டிருக்கின்றோம்.

இதற்கு மேலதிகமாக எங்களது இந்த நடவடிக்கைகளை கிழக்கு மாகாண குறிப்பாக மட்டக்களப்பு மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் தெளிவுபடுத்தி இருக்கின்றோம். அத்துடன் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பிரதேசக் கிளைகளின் பொதுக் கூட்டங்களை ஏற்பாடு செய்து இது தொடர்பில் தெளிவு படுத்தியதோடு அக்கூட்டங்களில் இவ்விடயத்தின் அவசியத் தன்மை ஏற்றுக் கொள்ளப்பட்டது.

எனவே இவ்விடயம் தொடர்பில் மக்கள் குழப்பமடையாது இதன் உண்மை நிலவரத்தை உள்வாங்கிக் கொண்டு எங்களது நிலைப்பாடுகளை ஏற்றுக் கொள்ள வெண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கிழக்கு மாகாணசபை உறுப்பினர்கள் அனைவர் (ஒருவர்...?) சார்பாகவும் கேட்டுக் கொள்ளுகின்றேன். என அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -