ஐ.ஏ.காதிர் கான்-
அரச வைத்திய சாலைகளில் பணி புரியும் வைத்தியர்கள், தாதியர்கள் மற்றும் ஊழியர்கள் அனைவருக்கும், நுளம்புக் கடியிலிருந்து அவர்களைப் பாதுகாத்துக் கொள்ளும் நோக்கில், பூச்சி மருந்து கிரீம் வகையொன்று விநியோகிக்கப்பட்டு வருவதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் ஜயசுந்தர பண்டார தெரிவித்துள்ளார். டெங்கு நோயாளர்களுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களும், தாதியர்களும், ஏனைய ஊழியர்களும் முன்னெச்சரிக்கையாக இந்த பூச்சி மருந்தை உடலில் தடவிக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும், இந்த மருந்தை பொது மக்களும் பாவிப்பது சிறந்ததெனவும் டொக்டர் குறிப்பிட்டுள்ளார்.
உள்ளூர் தனியார் நிறுவனம் ஒன்று தயாரித்துள்ள இந்தப் பூச்சு மருந்தின் 11,250 டியூப்கள், சுகாதார அமைச்சிடம் கையளிக்கப்பட்டுள்ளதாகவும், இவற்றைப் படிப்படியாக நாட்டிலுள்ள சகல வைத்திய சாலைகளுக்கும் அனுப்பி வைப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் டொக்டர் குறிப்பிட்டுள்ளார்.
