அப்துல்சலாம் யாசீம்-
இலங்கை திட்டமிடல் சேவை உத்தியோகத்தர்களுக்கு இழைக்கப் பட்டுள்ள அநீதியை நிவர்த்திக்குமாறு கிழக்கு மாகாண திட்டமிடல் உத்தியோகத்தர் சங்கம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
தற்போது இலங்கை திட்டமிடல் சேவை முதலாம் வகுப்புக்காக அனுமதிக்கப் பட்ட ஆளணி எண்ணிக்கை 141 ஆக காணப் படுகின்றது. ஆனால் தற்போது 172 முதலாம் வகுப்பு உத்தியோகத்தர்கள் சேவையில் உள்ளனர். இவர்களுள் 31 பேருக்கு உரிய பதவிகள் இல்லாத காரணத்தினால் அவர்கள் திட்டமிடல் சேவை மூன்றாம் வகுப்பு பதவிகளில் அமர்த்தப் பட்டுள்ளனர்.
இதே வேளை இலங்கை நிர்வாக சேவையின் முதலாம் வகுப்புக்காக மேலதிகமான பதவிகள் உருவாக்கப் பட்டுள்ளன. ஆனால் நிர்வாக சேவையில் முதலாம் வகுப்பு உத்தியோகத்தர்கள் பற்றாக்குறை உள்ளது.
இதனால் நிர்வாக சேவையின் மூன்றாம் வகுப்பு உத்தியோகத்தர்கள் பலர் முதலாம் வகுப்பு பதவிகளில் அமர்த்தப் பட்டுள்ளனர். அதாவது இலங்கை திட்டமிடல் சேவை முதலாம் வகுப்பு உத்தியோகத்தர்களுக்கு பதவி இல்லாததால் அவர்கள் கீழ் நிலையில் உள்ள மூன்றாம் வகுப்பு பதவிகளை வகித்து வருகின்றனர்.
அதேவேளை நிர்வாக சேவையின் முதலாம் வகுப்பில் ஆளணி இல்லாமல் அதிக பதவிகள் உருவாக்கப் பட்டுள்ளதால் அச்சேவையின் மூன்றாம் வகுப்பு உத்தியோகத்தர்கள் முதலாம் வகுப்பு பதவிகளை வகித்து வருகின்றனர். இந்த இரண்டு சேவைகளும் நாடளாவிய சேவைகள் என்று குறிப்பிடப் பட்டுள்ள போட்டதிலும் இரண்டு சேவைகளுக்குமான ஆளணி விடயத்தில் பாரிய இடைவெளி காணப் படுகின்றது.
இது திட்டம்மிடல் சேவை உத்தியோகத்தர்களுக்கு இழைக்கப் பட்டுள்ள பாரிய அநீதியாக இருப்பதோடு இலங்கை அரசியலமைப்பு சட்டத்தில் குறிப்பிடப் பட்டுள்ள சமத்துவ உரிமைகளை மீறும் செயலாகவும் உள்ளது. எனவே தயவு செய்து இந்த விடயங்களை தங்களது மேலான கவனத்துக்கு எடுத்து திட்டமிடல் சேவை உத்தியோகத்தர்களுக்கு இழைக்கப் பட்டுள்ள அநீதியைப் போக்க ஆவண செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம் என அந்த கோரிக்கையில் குறிப்பிடப் பட்டுள்ளது.