அகமட் எஸ். முகைடீன்-
கல்முனை மாநகர சபையினால் மேற்கொள்ளப்படவுள்ள அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டு பிரதி அமைச்சர் ஹரீஸ் தலைமையில் பல்வேறு அபிவிருத்தி வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதற்கான தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டன.
கல்முனை மாநகர சபை ஆலோசனைக் குழுக் கூட்டம் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவரும் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் தலைமையில் இன்று (8) சனிக்கிழமை காலை கல்முனை மாநகர சபையில் நடைபெற்றபோது மேற்படி தீர்மானங்கள் எடுக்கப்பட்டன.
அந்தவகையில் கல்முனை கடற்கரை பள்ளிவாசல், ஸாஹிரா வீதி சந்தியிலிருந்து சாய்ந்தமருத ஜும்ஆ பள்ளிவாசல் வரையான பகுதி, உவஸ்லி பாடசாலை சுற்றுவட்ட சந்தியிலிருந்து தாழவட்டுவான் சந்தி வரையிலான பிரதேசம், நற்பிட்டிமுனை, மருதமுனை போன்ற பிரதேசங்களில் நவீன மின்கம்பங்கள் அமைத்து நகரங்களை அழகுபடுத்துவதற்கு தீர்மாணிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு விகிதாசார அடிப்படையில் தமிழ் பிரதேசங்களிலும் அபிவிருத்தி வேலைத்திட்டங்களை மேற்கொள்ளுவதாகவும் அதற்கான முன்மொழிவுகளை தமிழ் பிரதிநிதிகள் ஓரிரு நாட்களுக்குள் மாநகர பொறியியலாளரிடம் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
கல்முனை மாநகர சபை ஆணையாளர் ஜே. லியாகத் அலியின் ஒருங்கிணைப்பில் நடைபெற்ற இக்கூட்டத்தில் கல்முனை மாநகர சபை பொறியியலாளர் ரி. சர்வானந்தன், கணக்காளர் எம். தஸ்தீக், கல்முனை மாநகர சபை முன்னாள் பிரதி முதல்வரும் கட்சியின் தவிசாளருமான ஏ.எல். அப்துல் மஜீட், டாக்டர் எஸ்.எம்.ஏ. அஸீஸ், கல்முனை மாநகர சபை முன்னாள் எதிர்க்கச்சித் தலைவர் ஏகாம்பரம் ஐயா, கல்முனை மாநகர சபை முன்னாள் உறுப்பினர்கள், பிரதி அமைச்சரின் இணைப்புச் செயலாளர்களான நௌபர் ஏ. பாவா, கே.எம். தௌபீக், ஏ.எம். றினோஸ், ஊர் பிரமுகர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.