இவ்வாண்டுக்கான நிதி ஒதுக்கீடு மத்திய அரசிலிருந்து ஒரு சதமேனும் கிழக்கு மாகாண சபைக்கு வந்து சேரவில்லை. கிழக்கு மாகாணத்துக்கான நிதி ஒதுக்கீடுகளை வழங்குவதில் மத்திய அரசு கையாளும் மந்த கதி நிலைமையினால் அபிவிருத்திப் பணிகளை முன்னெடுப்பதில் பல்வேறு தடங்கல்களை எதிர்கொள்வதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் தெரிவித்தார்.
திங்கட்கிழமை 19.06.2017 மாலை ஜனாதிபதியின் தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் மத்திய அமைச்சர்கள், முதலமைச்சர்கள் மற்றும் அமைச்சுக்களின் செயலாளர்கள் கலந்து கொண்ட கூட்டத்தின்போதே கிழக்கு முதலமைச்சர் இதனை ஜனாதிபதியின் கவனத்திற்குக் கொண்டு வந்தார்.
தொடர்ந்து அங்கு மாகாணத்தில் எதிர்நோக்கப்படும் பொதுவான விடயங்களை ஜனாதிபதியின் கவனத்திற்குக் கொண்டு வந்த முதலமைச்சர்ளூ மத்திய அரசினால் மாகாண சபைகளுக்கு வழங்க வேண்டிய நிதி தாமதித்துக் கிடைப்பதால் பொதுமக்களே பாரிய அசௌகரியங்களுக்கு உள்ளாகிறார்கள். கிழக்கு மாகாணத்திற்கு கடந்த வருடத்துக்கு ஒதுக்கப்பட்ட நிதியில் அபிவிருத்திப் பணிகள் நிறைவடைந்து அவற்றின் பல மில்லியன் ரூபாய்களுக்கான பற்றுச்சீட்டுக்களுக்கு இதுவரை நிதி விடுவிக்கப்படவில்லை.
அத்துடன் 2017ஆம் ஆண்டுக்கு வரவு செலவுத் திட்டத்தினூடாக ஒதுக்கப்பட்ட நிதியில் ஒரு சதமேனும் இது வரை கிழக்கு மாகாண சபைக்கு வழங்கப்பட்டவில்லை. எனவே ஒதுக்கப்பட்டுள்ள நிதியினை உரிய நேரத்தில் வழங்க ஆவன செய்ய வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்தார். இவ்வேளையில், நிதியமைச்சின் செயலாளருக்கு பணிப்புரை விடுத்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கிழக்கு மாகாணத்திற்கான நிதியினை வழங்குவதை துரிதப்படுத்துமாறு உத்தரவிட்டார்.