நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் பிடி விறாந்து பிறப்பிக்கப்பட்டிருக்கும் நிலையில், பொதுபலசேனா அமைப்பின் தலைவர் கலகொட அத்தே ஞானசார தேரர், இன்று (31) புதன்கிழமை மேன்முறையீட்டு நீதிமன்றில் பிரசன்னமாகவிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மேற்படி வழக்கில் கடந்த 24ஆம் திகதி நீதிமன்றில் பிரசன்னமாகவிருந்த ஞானசார தேரர் சமுகமளிக்கவில்லை. உடல் நிலை காரணமாகவே அவர் சமுகமளிக்கவில்லை என்று அவரது தரப்பு சட்டத்தரணிகள் தெரிவித்திருந்தனர். இதையடுத்து, மருத்துவச் சான்றுகளுடன் இன்று (31) ஞானசார தேரர் நீதிமன்றில் பிரசன்னமாகவேண்டும் என்று நீதிபதிகள் அறிவுறுத்தியிருந்தனர்.
இதேவேளை, இன வெறுப்புப் பேச்சுக்கள் மூலம் இனங்களுக்கிடையேயான ஒற்றுமையைக் குலைக்க முயற்சி செய்தமை உள்ளிட்ட சில குற்றச்சாட்டுக்களின் பேரில், ஞானசார தேரரிடம் வாக்குமூலம் பெறுவதற்காக சில குழுக்கள் அவரைத் தேடும் முயற்சியில் ஈடுபடுத்தப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஞானசார தேரர் தனது சுய பாதுகாப்புக்காகவே தலைமறைவாக இருப்பதாக பொதுபலசேனாவின் இயக்குனர் டிலந்த வித்தானகே தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.