எப்.முபாரக்-
எதிர்வரும் சிங்கள-தமிழ் புத்தாண்டை முன்னிட்டு திருகோணமலை கந்தளாய் பிரதேசத்தில் உள்ள உணவகங்கள் ரெஸ்டோரண்டுகள் மற்றும் வர்த்தக நிலையங்களை பரிசோதனைக்குட்படுத்த உள்ளதாக கந்தளாய் பொதுச் சுகாதார அதிகாரி டி.டபிள்யூ.திஸாநாயக்க தெரிவித்தார்.
அடுத்த ஏப்பிரல் மாதம் முதலாம் திகதியிலிருந்து இவ் பரிசோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளவுள்ளதாகவும் வைத்திய அதிகாரி தெரிவித்தார். புத்தாண்டு காலப்பகுதியில் தரமானதும் சுகாதாரமானதுமான உணவு வகைகள் பொதுமக்களுக்குக் கிடைப்பதை உறுதிப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இதற்கு மேலதிகமாக உணவுப் பொருட்களஞ்சியங்கள் மொத்த வர்த்தக நிலையங்கள் குறிப்பாக நகரப்புரங்களின் உள்ள கடைகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளது.
மேலும் எதிர்வரும் வெசாக் தினத்தை முன்னிட்டு மே 02ம் திகதி தொடக்கம் உணவுப் பாதுகாப்பு வாரமொன்றும் சுகாதார அமைச்சினால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாகவும் கந்தளாய் பொதுச் சுகாதார வைத்திய அதிகாரி தெரிவித்தார். இதன் போது அசுத்தமான செயற்பாடுகளை மேற்கொண்டு வர்த்தக நிலையங்களை வைத்திருப்போருக்கெதிராக நீதிமன்றம் ஊடாக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளதாகவும் கந்தளாய் பொதுச் சுகாதார வைத்திய அதிகாரி தெரிவித்தார்.