அஸ்லம் எஸ்.மௌலானா-
கல்முனை பலநோக்கு கூட்டுறவுச் சங்க அலுவலகத்திற்கு கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கே.எம்.ஏ.ரஸ்ஸாக் (ஜவாத்) நேற்று திங்கட்கிழமை விஜயம் செய்து, சங்கத்தின் அபிவிருத்தி தொடர்பில் அதன் இயக்குனர் சபையினருடன் கலந்துரையாடினார்.
இயக்குனர் சபைத் தலைவர் ஏ.எம்.ஹனிபா தலைமையில் இடம்பெற்ற இக்கலந்துரையாடலில் கூட்டுறவு அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.ஐ.எம்.பரீத், இயக்குனர் சபையின் உப தலைவர் எம்.ஐ.எம்.வலீத், பொது முகாமையாளர் ஏ.சி.பைசால் உட்பட இயக்குனர் சபை உறுப்பினர்களும் பணியாளர்களும் பங்கேற்றிருந்தனர்.
இதன்போது கல்முனை பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்தில் நிலவும் குறைபாடுகள் மற்றும் தேவைகள் பற்றி மாகாண சபை உறுப்பினர் ஜவாதுக்கு எடுத்துக் கூறப்பட்டு, அவற்றை நிவர்த்தி செய்வதற்கு,அவரது ஒத்துழைப்பு கோரப்பட்டது.
இவற்றுள் குறிப்பாக சங்கத்திற்கு சகல வசதிகளும் கொண்ட புதிய கட்டிடத் தொகுதி அமைத்தல் மற்றும் சங்கத்திற்கான வளங்களை அதிகரித்தல் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டதுடன் ஜ்வாதின் ஆலோசனையின் பிரகாரம் இவற்றுக்கான நிதி அனுசரணையை பெறும் பொருட்டு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நகர திட்டமிடல், நீர் வழங்கல் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் மற்றும் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமத் ஆகியோரை சந்தித்து கோரிக்கைகளை முன்வைப்பது என தீர்மானிக்கப்பட்டது.
அதேவேளை பலநோக்கு கூட்டுறவுச் சங்க அலுவலகத்திற்கு தேவையான பெக்ஸ், போட்டோக் கொப்பி, ஸ்கேன், பிரிண்டர் உள்ளிட்ட இயந்திரத் தொகுதியை உடனடியாக கொள்வனவு செய்து கொடுப்பதற்கு மாகாண சபை உறுப்பினர் ஜவாத் அதே இடத்தில் இருந்தவாறு ஏற்பாடுகளை மேற்கொண்டார்.
