இலங்கை ஜனநாயக சோஷலிச குடியரசின் 69ஆவது சுதந்திர தினத்தை இன, மத, மொழி பேதங்கள் மறந்து அனைவரும் ஒற்றுமையோடு கொண்டாட வேண்டும் எனத்தெரிவித்த புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ், தாய் நாட்டை அபிவிருத்திப் பாதைக்கு கொண்டு செல்லவேண்டுமாயின் இனங்களுக்கிடையில் நம்பிக்கை, ஒற்றுமை, சுதந்திரம், விட்டுக்கொடுப்பு மேலும் வலுப்படுத்திக்கொள்ள வேண்டும் என்றார்.
இலங்கை திருநாட்டின் 69ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் விடுத்துள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
அதில் அவர் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:-
ஒரு நாட்டில் குழப்பமான சூழ்நிலைகளை ஏற்படுத்துவதன் ஊடாகவே வெளிச்சக்திகள் அங்கு ஊடுருவுகின்றன. அப்போது தேசத்துக்கு ஏற்படும் முதல் இழப்பு சுதந்திரம் பறிக்கப்படுவதாகும். மூன்று தசாப்தங்களாக நாட்டிலிருந்த பயங்கரவாத சூழ்நிலையை எத்தனை வெளிச்சக்திகள் பயன்படுத்தி இலாபம் பெற முயற்சித்தன என்பது இந்நாட்டு மக்களுக்குத் தெரியாத ஒரு விடயமல்ல.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அவரது அரசு எடுத்த உறுதியான தீர்மானங்கள் மூலம் நாடு பயங்கரவாதத்திலிருந்து பாதுகாக்கப்பட்டு இரண்டாவது முறை சுதந்திரம் அடைந்தது. அந்த சுதந்திரம் எமது மானுசிகத்தையும், இராணுவ பலத்தையும்இ அரசியல் ஸ்தீரத்தன்மையையும் உறுதிசெய்தது.
எனினும், அதன் பின்னர் துரிதிஷ்ட வசமாக வலுப்பெற்ற இனங்களுக்கு இடையிலான விரிசல் நிலை நல்லாட்சி அரசில் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு சிறுபான்மை மக்களது இருப்பு பாதுகாக்கப்பட்டது. 69ஆவது சுதந்திர தினத்தினையே இன, மத, மொழி பேதங்களை மறந்து அனைத்துதரப்பினரும் ஒன்றாக சுதந்திர காற்றை சுவாசித்தவர்களாக கொண்டாடுகின்றோம். இந்நிலை தொடர பிரார்திக்கின்றேன்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான அரசு தாய் நாட்டை கட்டியெழுப்புவதற்கு எடுக்கும் முயற்சிகளை பாராட்டுகின்றோம். அவர்களுக்கு உறுதுணையாக நாட்டு மக்கள் இருக்க வேண்டும். இன ஒற்றுமை மூலம் வெளிப்படுத்தப்படும் பாரிய சக்தி நாட்டின் அபிவிருத்திக்கு பக்கபலமாக அமையும். சுதந்திர தினத்தை இலங்கையர் அனைவரும் தேசிய கொடி ஏற்றி கொண்டாட வேண்டும். குறிப்பாக முஸ்லிம்கள் தமது தாய் நாட்டின் மீதுள்ள தேசப்பற்றைக் எடுத்துக்காட்டுவதற்கு இது ஓர் சந்தர்ப்பமாகும் - என்றார்.