ஈமானிய சமூகம் என்ற அடிப்படையில் முஸ்லிம் அரசியல் தலைவர்கள் தமது அரசியல் செயற்பாடுகளை அமைத்துக் கொள்ள முன்வர வேண்டும் என்று நாபீர் பெளண்டேசன் சிறீ லங்கா அமைப்பின் தலைவரும் அரசியல் விமர்சகரும் பொறியியலாளருமான யூ. கே . நாபீர் தெரிவித்துள்ளார்.
சிறீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் றவூப் ஹக்கீம் மற்றும் முன்னாள் பிரதி அமைச்சர் பஷீர் சேகுதாவூத் ஆகியோருக் கிடையில் ஏற்பட்டுள்ள (அரசியல் ரீதியான) பிரச்சினை தொடர்பாக கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
தொடர்ந்தும் அவர் இது விடயமாகக் குறிப்பிடும் போது,
அரசியலுக்காக தனது சகோதரனை காட்டிக் கொடுக்க முனைவதை யாராலும் ஏற்றுக் கொள்ள முடியாது. ஜனநாயக நாட்டு அரசியலில் விமர்சனங்கள் இருந்தாலும் பக்குவத்தோடு அதனை நாம் கையாள வேண்டும். அரசியல்வாதிகள் விடுகின்ற தவறுகள் பிழைகளை சுட்டிக் காட்ட வேண்டும் என்பதற்காக அநாகரீகமாக சில சுய நல அரசியல்வாதிகள் நடந்து கொள்வது கவலை தரும் விடயமாகும்.
மக்கள் தாங்கள் தெரிவுசெய்த பிரதிநிதிகள் சார்ந்த கட்சிகளை ஆதரித்து விட்டு அவர்களின் தான் தோன்றித்தனமான சுயநல நடவடிக்கைக்கு இடமளிக்க கூடாது. நாகரீகமான முறையில் தமது செயற்பாடுகளை அமைத்துக் கொள்ளத் தவறும் அரசியல்வாதிகளை மக்கள் ஓரங்கட்ட வேண்டும். ஏனெனில் அவர்களால் பாதிக்கப்படுவது தனி ஒரு மனிதன் அல்ல. ஒட்டு மொத்த முஸ்லிம் சமூகமுமாகும். ஒரு சமூக அமைப்பின் தலைவர் என்ற வகையில் நாம் சமூகம் சார்பாக இந்த நடவடிக்கையை கண்டிக்கின்றோம்.
இந்த நிலையை மு.கா. வில் ஒற்றுமையாக இருந்த போது செய்திருக்க வேண்டும். தற்போது காலம் கடந்து அதுவும் மிகப் பாரமான முறையில் விமர்சிக்கவும் தலைப்பட்டுள்ளமை பெரும் விமர்சனங்களை மக்கள் முன் தோற்றுவித்துள்ளது.
எனவே தமது சொந்த அரசியல் இலாபங்களுக்காக சமூகம் தலைகுனிய இடமளிக்க கூடாது என்பதுடன் மக்கள் முன் இதய சுத்தியுடன் செயற்பட முன்வர வேண்டும் எனவும் கேட்டுக் கொள்கின்றேன்.