காலியைச் சேர்ந்த மௌலவி முஹம்மத் பாஹிம் நிஸாம் முஸ்தபவி அவர்கள்,பாடசலைக் கல்வியை முடித்து 14வருடங்களின் பின்னர் க.பொ.த உயர்தரப்பரீட்சையில் மூன்று பாடங்களை மூன்று மொழிகளில் தோற்றி "A" சித்திபெற்றுள்ளார்.மௌலவி முஹம்மத் பாஹிம் முஸ்தபவி அவர்கள் காலி தளாப்பிட்டியைச் சேர்ந்தவராவார். இவர் காலி ஓல்சைன்ட் கல்லூரி மற்றும் காலி முஸ்தபவிய்யா அரபுக் கல்லூரியின் பழைய மாணவராவார்.
2002ஆம் ஆண்டு முதல்முறையாக க.பொ.த சாதாரணப் பரீட்சைக்குத் தோற்றிய இவர் அதில் சித்திபெறவில்லை. பின்னர், அவர் பாடசலைக் கல்வியை நிறுத்திவிட்டு, காலி தளாப்பிட்டியில் அமைந்துள்ள முஸ்தபவிய்யா அரபுக் கல்லூரியில் இணைந்துகொண்டார். அங்கிருந்து மௌவியாக பட்டம் பெற்று வெளியேறிய அவர், பேருவலை செய்ஹ் முஸ்தபா பள்ளிவாசலில் கதீப்பாக கடமையாற்றி வந்தார். இதன்போது அவர் மீண்டும் 2014ஆம் ஆண்டு க.பொ.த சாதாரணப் பரீட்சைக்குத் தோற்றி அதில் சித்தியடைந்து, பின்னர் 2016ஆம் ஆண்டு க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கு கலைப் பிரிவில் தோற்றி இத்திறமையை வெளிப்படுத்தியுள்ளார்.
இதில் விசேடமாக, இவர் 14 வருடங்களுக்குப் பின்னர் தோற்றிய உயர்தரப்பரீட்சையில் அரபுப் பாடத்தை அரபு மொழியிலும், இஸ்லாம் பாடத்தை தமிழ் மொழியிலும் மற்றும் அரசியல் விஞ்ஞான பாடத்தை சிங்கள மொழியிலும் எழுதி, மூன்று பாடங்களிலும் "A" சித்திபெற்றுள்ளார்.
இந்த வெற்றிக்கு சரியாக வழிகாட்டிய பெற்றோருக்கும், தான் கல்விகற்ற ஓல்சைன்ட் கல்லூரி மற்றும் காலி முஸ்தபவிய்யா அரபுக் கல்லூரிக்கும், தனக்கு அரசியல் விஞ்ஞான பாடத்தை கற்பித்த சேனாட் அத்துக்கோரல ஆசிரியருக்கும், விசேடமாக எப்போதும் தனக்கு சரியான முறையில் வழிகாட்டி உதவி,ஒத்தாசைகள் செய்த தனது ஆன்மீகத் தலைவருக்கும் மௌலவி முஹம்மத் பாஹிம் முஸ்தபவி அவர்கள் நன்றி தெரிவித்தார். முயற்சிக்குச் செய்ய முடியாததொன்றும் இல்லை. முயற்சி,உழைப்பு மற்றும் சரியான வழிகாட்டல் இருக்கின்ற போது வெற்றி நிச்சயம் என அவர் மேலும் தெரிவித்தார்.
இப்ஹாம் நவாஸ்,றிஹ்மி.