எம்.ஜே.எம் சஜீத் -
காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் மகப்பேற்று மற்றும் சிறுவர் ஆகிய இரண்டு பிரிவுகளையும் அபிவிருத்தி செய்து கிழக்கு மாகாணத்திலே நிபுணத்துவம் வாய்ந்த ஒரு விசேட வைத்தியசாலையாக அதனை மாற்றியமைப்பது தொடர்பில் ஆராய்ந்து வருவதாக மீள் குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லா தெரிவித்தார்.
காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் ஹிறா பவுண்டேஷன் ஊடாக சுமார் 100மில்லியன் ரூபா நிதியில் அமைக்கப்பட்ட ETU மற்றும் ICU பரிவுகளை திறந்து வைக்கும் நிகழ்வில் (20) பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில் அரசாங்கத்தினுடைய நிதிகளைக்கொண்டு எமது மக்களினுடைய எல்லாத் தேவைகளையும் நிறைவேற்றிக்கொள்ள முடியாது. காத்தான்குடி ஆதார வைத்தியசாலை ETU மற்றும் ICU பரிவுகளை அபிவிருத்தி செய்வதற்காக நான் ஒரு வெளிநாட்டு சகோதரரிடம் கோரிய போது அவர் அதற்கு இணங்கி நிதிகளை ஒதுக்கீடு செய்வதாகவும் தெரிவித்தார்.
எமது முயற்சியினால் இரண்டு ETU, ஒரு ICU என்ற அடிப்படையில் அமைப்பதற்கு எங்களுக்கு நிதிகளும் கிடைக்கப்பெற்றது. இச்சந்தர்ப்பத்தில் காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் ஒரு ETU வினையும், ஒரு ICU வினையும் அமைப்பதற்கும், மற்றுமொரு ETU வினை ஏறாவூர் ஆதார வைத்தியசாலையில் அமைப்பதற்கும் திட்டமிட்டிருந்தோம்.
இந்த விடயமாக நான் ஏறாவூர் ஆதார வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகருடன் பல தடவைகள் தொடர்பு கொண்டு ETU ஒன்றினை அமைப்பதற்கு அனுமதி கேட்ட போது எங்களுக்கு அவர் அனுமதி தரவில்லை காரணம் கிழக்கு மாகாண முதலமைச்சர் எக்காரணம் கொண்டும் அதனைச் செய்வதற்கு அனுமதிக்கக் கூடாது என அந்த வைத்திய அதிகாரிக்கு உத்தரவிட்டிருந்தார்.
இவ்வாறானதொரு அபிவிருத்தியை தடுத்த முதலமைச்சர் ஒரு கட்டிலைக்கூட ஏறாவூர் ஆதார வைத்தியசாலைக்கு பெற்றுக்கொடுக்கவில்லை பதவிகள், அதிகாரங்கள் என்பது நிரந்தரமானவை அல்ல எமக்கு கிடைத்திருக்கின்ற பதவிகள் நாட்களை எண்ணிக்கொண்டிருக்கின்ற பதவிகளாகும். இறைவன் பதவிகளை தருகின்ற போது அதனை சமூகத்திற்காக பயன்படுத்த வேண்டும். அதனூடாக நல்ல பல பணிகளைச் செய்வதற்கு முன்வரவேண்டும்.
குறிப்பாக தேர்தல் ஒன்று வருகின்ற போது ஆளுக்கொரு கட்சியில் நிற்பது கட்டாயம் எமது நாட்டினுடைய அரசியல் அப்படித்தன் உள்ளது. எனவே தேர்தல் முடிந்ததும், ஊர், சமூகம், நாடு என ஒன்றுபட்டு செயற்பட வேண்டும். மாறாக ஒரு மாவட்டத்திலுள்ள பாராளுமன்ற உறுப்பினர்கள், தமிழ், முஸ்லிம் என்றும் கட்சிகள் என்றும் பிரிந்து செயற்படுகின்ற போது இந்த மாவட்டத்தினை ஒரு போதும் கட்டியெழுப்ப முடியாது என அவர் மேலும் தெரிவித்தார்.