ஏ.எச்.ஏ.ஹுஸைன்-
மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்போது பெய்துவரும் அதிக மழைவீழ்ச்சியின் காரணமாக, மழை நீர் சில வீதிகளுக்குக் குறுக்கே பாய்ந்தோடுவதால் பயணிகள் பெருதும் சிரமப்பட வேண்டியுள்ளதாகக் கூறுகின்றனர். சில இடங்களில் வீதிப் போக்குவரத்துக்களும் தடைப்பட்டுள்ளன.
மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவான்கரைப் பகுதி அடைமழை வெள்ளத்தினால் மிகவும் பாதிக்கப்பட்டுப் போயுள்ளது. அங்கு 3 வீதிகளினூடான போக்குவரத்தும் தடைப்பட்டுள்ளன.
வெல்லாவெளியிலிருந்து மண்டூருக்குச் செல்லும் பிரதான வீதியில் இரண்டு இடங்களில் வெள்ள நீர் பாய்ந்து செல்கிறது. வெல்லாவெளியிலிருந்து பாலையடிவட்டை நோக்கிச் செல்லும் பிரதான வீதியில் நீர் திரம்பி வழிவதனால் இவ்வீதியுடனான போக்குவரத்துக்களும் தடைப்பட்டுள்ளன.
இவ்விருவீதிகளில் அவசர அத்தியாவசிய போக்குவரத்துக்களுக்காக மாத்திரம் பயன்படுத்துவதற்காக போரதீவுப்பற்று பிரதேச சபையினர் உழவு இயந்திரத்தில் வெள்ள நீரைக் கடந்து செல்வதற்கான போக்குவரத்தை ஏற்பாடு செய்து கொடுத்துள்ளனர். மேலும், காக்காச்சுவட்டையிலிருந்து ஆனைகட்டியவெளி நோக்கிச் செல்லும் பிரதான வீதியையும் வெள்ள நீர் ஊடறுத்துப் பாய்வதனால் அங்கு பொதுப்போக்குவரத்திற்கென படகுச்சேவை ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது.