கிழக்கு மாகாணத்தில் வௌ்ள அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணங்களை வழங்கும் நடவடிக்கையினை துரிதப்படுத்துமாறு கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்,
கிழக்கின் பல பகுதிகளும் வௌ்ள நீரில் மூழ்கியுள்ளமையினால் மக்கள் இடம்பெயர்ந்து பாடசாலைகள் மற்றும் பொது இடங்களில் தங்கியுள்ளமையினால் அவர்களுக்கான நிவாரணங்களை உரிய வகையில் கிடைக்கச் செய்வதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு கிழக்கு மாகாண முதலமைச்சரின் செயலாளர் யூ.ஏ எல் அஸீஸ் மற்றும் மாவட்ட அரசாங்க அதிபர்களுக்கு கிழக்கு மாகாண முதலமைச்சர் ஆலோசனை வழங்கியுள்ளார்.
அத்துடன் நிவாரணங்களை வழங்கும் போது குழந்தைகள் சிறுவர்கள் ,கர்ப்பணித் தாய்மார்கள் மற்றும் முதியோர் குறித்து விசேட கவனம் செலுத்துமாறும் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் தெரிவித்துள்ளார்.
இதேவேளை வௌ்ள நீர் வடிந்தோடுவதற்கான ஏற்பாடுகளை முன்னெடுக்குமாறும் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் அவர்களின் ஆலோசனையின் பிரகாரம் முதலமைச்சரின் செயலாளர் யூ ஏ எல் அஸீஸ் உள்ளூராட்சி மன்ற செயலாளர்களுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
அத்துடன் வௌ்ள நிலைமையால் தொற்று நோய்கள் பரவக் கூடிய அபாயமுள்ளதால் சம்பந்தப்பட்ட தரப்பினர் அது தொடர்பில் முன்னெச்சரிக்கை நடவடடிக்கைகளை முன்கூட்டியே முன்னெடுப்பதுடன் மக்களின் சுகாதாரத்துக்கு அச்சுறுத்தல் ஏற்படாதவாறு நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டுமென கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் வலியுறுத்தியுள்ளார்.