சொஹைப் கோலி (24) என்பவர் பன்னாட்டு நிறுவனம் ஒன்றின் அதிகாரி. இவர் கடந்த ஞாயிறன்று இரவு தனது பி.எம்.டபிள்யூ. ரகக் காரில் மணிக்கு 120 கிலோ மீற்றர் வேகத்தில் சென்றுகொண்டிருந்தார்.
டெல்லியின் மையப் பகுதியில் கோலி சென்றுகொண்டிருந்தபோது, முன்னால் சென்றுகொண்டிருந்த ஊபர் வாடகைக் கார் மீது எதிர்பாராத விதமாக மோதியது. இதில் தூக்கியெறியப்பட்ட கார் சில அடி தூரம் வரை இழுத்துச் செல்லப்பட்ட பின்பே நின்றது. மோதிய வேகத்திலேயே, குறித்த வாடகைக் காரைச் செலுத்திச் சென்ற நஸ்ருல் இஸ்லாம் (30) என்பவர் உடல் நசுங்கி பலியானார்.
நஸ்ருலின் வருமானத்தை நம்பியே அவரது மனைவி, இரண்டு குழந்தைகள் மற்றும் பாட்டி ஆகியோர் வாழ்ந்து வருகின்றனர். அண்மையில் தனது வேலையை இழந்த இவர், ஊபர் நிறுவனத்தில் சம்பவ தினத்தன்று காலையே வேலைக்குச் சேர்ந்திருந்தார்.
விபத்தையடுத்து கோலி தப்பிச் சென்றபோதும், நேற்று தனது தந்தையுடன் பொலிஸில் ஆஜரானார்.
கோலியின் மீதான பொலிஸ் விசாரணையின்போது, மது அருந்திவிட்டு வாகனத்தைச் செலுத்தவில்லை என்று கூறிய கோலி அதீத வேகத்தில் சென்றதை ஒப்புக்கொண்டுள்ளார். எனினும், முன்னால் சென்ற கார் திடீரென்று நிறுத்தப்பட்டதனாலேயே விபத்து சம்பவித்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். விசாரணை தொடர்கிறது.