'வானே இடிந்ததம்மா' அம்மா இரங்கல் பாடலின் ஊடாக உலகத்தமிழர்களின் கவனத்தை ஈர்த்த ஈழத்து கவிஞர், திரைப்பட பாடலாசிரியர் பொத்துவில் அஸ்மின் மற்றும் இசையமைப்பாளர் வர்ஷன் ஆகியோர் மீண்டும் இணைந்து உலகத்தமிழர்கள் பொங்கலை மகிழ்வோடு கொண்டாடிக்கொண்டிருக்கும் இந்த தருணத்தில் மரணவலியில் வாழ்வாதாரத்தை இழந்து வாடிக்கொண்டிருக்கும் உழவர்களின் உயிர்க்குரலாய் 'போங்கடா நாங்க பொங்கலடா' என்ற வலிமிகு பாடலை வெளியிட்டுள்ளனர்.
இயக்குனர் எஸ்பி ஜனநாதனின் 'புறம்போக்கு' திரைப்படத்தினூடாக தமிழ் சினிமாவில் அறிமுகமான இசையமைப்பாளர் வர்ஷன் இசையமைத்து இந்தப்பாடலை பாடியுள்ளார். இந்தப்பாடலை எழுதிய கவிஞர் அஸ்மின் விஜய் ஆண்டனியின் 'நான்' திரைப்படத்தில் 'தப்பெல்லாம் தப்பேயில்லை' என்ற பாடலை எழுதி தமிழ்சினிமாவில் அறிமுகமானவர் அவர் இந்தப்பாடல் பற்றி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
'உழவர்களுக்கு சமர்ப்பணம் செய்து தமிழ் சினிமா கலைஞர்களால் வெளியிடப்படும் முதல் கவன ஈர்ப்பு பாடல் இதுவாகும். இம்முறை பொங்கல் வாழ்த்துக்கள், 'ஹேப்பி பொங்கல்' போன்ற வார்த்தைகளில் உண்மையில்லை என்பதே உண்மை. நாற்காலியில் அமர்ந்து மாத சம்பளத்தோடு பொங்கலுக்கான ஊக்கத்தொகையையும் பெருபவர்களுக்கு வேண்டுமானால் இந்த ஆண்டு பொங்கல் மகிழ்வினை கொடுக்கலாம் ஆனால் நாற்றங்காலில் உழன்றபடி, வறண்ட பூமியையும், பொய்த்துப்போன வானத்தையும் , வாடிய பயிரையும் கண்டு வாடிக்கொண்டிருக்கும் விவசாயிகளுக்கு இந்தப்பொங்கல் மகிழ்வினை கொடுக்கவில்லை மாறாக மரணபயத்தை கொடுத்துள்ளது.
குறுகிய காலத்தில் 100க்கும் அதிகமான விவசாயிகள் இதுவரை தற்கொலை செய்துள்ளார்கள். இது எதனையும் கருத்தில்கொள்ளாது உலகம் வேறு ஒரு திசையில் நகர்ந்து கொண்டிருக்கிறது. இது பற்றிய கவனத்தை உலகுக்கும் உலகத் தமிழர்களுக்கும் உணர்த்தும்விதமாக இந்த பாடலை அமைத்துள்ளோம். இந்தப்பாடலினூடாக இளையதலைமுறையினரும் கற்றவர்களும் உணர்வுபெற்று உழவர்களின் நலனுக்கா குரல்கொடுக்க ஓரணியில் திரளவேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பாகும் என்று குறிப்பிட்டுள்ளார்.
தொடர்புகளுக்கு :
இசையமைப்பாளர் வர்சன்: 00919841173000
பாடலாசிரியர் அஸ்மின்: 0094771600795