ஏ.எச்.ஏ. ஹுஸைன்-
பல்லின மாணவர்கள் மத்தியில் உருவாகும் சமாதானமே இலங்கையை சுபீட்சம் மிக்க நாடாக மாற்றும் என மட்டக்களப்பு கல்வி வலயம், ஏறாவூர்ப் பற்று கோட்டம் 1 இன் கல்விப் பணிப்பாளர் எம்.பாலசுப்ரமணியம் தெரிவித்தார்.
தேசிய ஒற்றுமைக்கும் நல்லிணக்கத்திற்குமான அலுவலகத்தின் அனுசரணையுடன் ஏற்பாடு செய்யப்பட்ட பொங்கல் விழா ஏறாவூர் தமிழ் மகா வித்தியாலயத்தில் செவ்வாய்க்கிழமை (31.01.2017) தமிழ், சிங்கள, முஸ்லிம் மாணவர்களின் பங்கு பற்றலுடன் இடம்பெற்றது.
மட்டக்களப்பு கல்வி வலயத்தின் ஏறாவூர்ப் பற்று கோட்டம் 1 கல்வி சமூகத்துடன் இணைந்து மட்டக்களப்பு மத்தி முஸ்லிம் கல்வி வலயம் மற்றும் மஹாஓயா சிங்கள கல்விச் சமூகம் என்பன இணைந்து சிங்கள, தமிழ், முஸ்லிம் மாணவர்களைக் கொண்டு இந்த கலாச்சார ஒருங்கிணைவுப் பொங்கல் விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அங்கு தொடர்ந்து உரையாற்றிய பாலசுப்பிரமணியம் மேலும் கூறியதாவது, இனங்களால் பிரித்துப் பார்க்க முடியாத அளவுக்கு பல சமயங்கள், பல கலாச்சாரம், பண்பாடுகள் கொண்டு இலங்கைத் திருநாடு அலங்கரிக்கப்பட்டிருக்கின்றது.
நன்முறைக்குப் பதிலாக வன்முறையைக் கையாண்டு இலங்கை தனித்துவமாகக் கொண்டிருக்கின்ற இந்த பல்லின கலாச்சார பண்பாட்டு அழகை எவரும் கெடுத்து விடக் கூடாது.
இந்த நாடு இனியும் சின்னாபின்னப்படாமலிருப்பதற்கு ஒரே வழி பல இன மத கலாச்சாரங்களைக் கொண்ட மாணவர் சமுதாயத்தை இன ஐக்கியத்துடன் கட்டி வளர்ப்பதேயாகும்.
இதனை தற்போதைய அரசாங்கம் நன்கு புரிந்து கொண்டுள்ளது. அதனால்தான் கல்வியமைச்சுக்கூடாக இத்தகைய சிறப்பு விழாக்கள் ஏற்பாடு செய்யப்படுகின்றன.
இனங்களுக்கிடையே சிறப்பான புரிந்துணர்வை ஏற்பாடு செய்வதற்காகத்தான் மாணவர் சமுதாயத்தக் கொண்டு இவ்வாறான கலாச்சார ஒருங்கிணைப்பு நிகழ்வுகளும் இடம்பெறுகின்றன.
அடுத்தவரின் மதம், மொழி, பண்பாடுகள், நன்நெறிகள் என்பனவற்றை ஒவ்வொருவரும் புரிந்து கொள்ள வழி செய்யப்பட்டால் ஒருமைப்பாடு இயல்பாகவே ஏற்பட்டு விடும்.
நாடு முன்னேற வேண்டுமாயின் நாட்டு மக்களிடம் சமாதானம் நிலைத்திருக்க வேண்டும். சமாதானத்தைத் காவிச் செல்லவும், அதனைத் தக்க வைத்துக் கொள்ளக் கூடிய ஒரு வளமும் பலமும் இந்த நாட்டின் சகல இன மாணவர் சமுதாயத்திடம்தான் உண்டு.' என்றார்.