இன்று மாலை 5 மணிக்கு கூடிய தமிழக சட்டசபை சிறப்பு கூட்டத்தில், ஜல்லிக்கட்டு தொடர்பான சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டது. விவாதம் நடத்தப்பட்ட நிலையில் ஒரு மனதாக இந்த சட்டம் நிறைவேறியது. இதன் மூலம் ஜல்லிக்கட்டு வேண்டி ஒரு வாரத்திற்கும் மேலாக, போராடியவர்களுக்கு வெற்றி கிடைத்துள்ளது.
வழக்கமாக ஆளுநர் உரை முடிந்ததும் அன்று பேரவை ஒத்தி வைக்கப்படும். ஆனால் ஜல்லிக்கட்டு போராட்டம் உச்சத்தில் உள்ளதால் இன்று மாலை சிறப்பு அமர்வு ஏற்பாடு செய்ய சட்டசபை அலுவல் ஆய்வு குழு முடிவு செய்திருந்தது. இதன்படி, மாலை 5 மணிக்கு சட்டசபை சிறப்பு கூட்டம் ஆரம்பித்தது.
இதையடுத்து, முதல்வர் பன்னீர்செல்வம், விலங்குகள் வதை தடுப்பு சட்டம் (தமிழ்நாடு திருத்தம்) 2017ல் திருத்தம் செய்யும் வகையில்
சட்ட மசோதாவை தாக்கல் செய்தார். இதையடுத்து அதன் மீது உரையாற்றினார் பன்னீர் செல்வம். அப்போது சட்டத்தை நிறைவேற்ற தான் எடுத்த முயற்சிகளை நினைவுகூர்ந்தார்.
இதன்பிறகு ஸ்டாலின் உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்கள் தங்கள் கருத்துக்களை தெரிவித்தனர். அனைவருமே சில கருத்துக்களையும், விமர்சனங்களையும் எடுத்துரைத்தனர். அதேநேரம் சட்டத்திற்கு ஆதரவை தெரிவித்தனர். இதன்பிறகு ஒரு மனதாக சட்டம் நிறைவேற்றப்பட்டது.
இதன் மூலம் ஜல்லிக்கட்டு போராட்டத்தில் மக்கள் புரட்சி வென்றுள்ளது.
முன்னதாக, மதியம், சபாநாயகர் தனபால் நிருபர்களிடம் கூறுகையில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, கோ.சி.மணி உள்ளிட்ட மறைந்த தலைவர்கள் மறைவுக்கு நாளை இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்படும் பிறகு சட்டசபை ஒத்தி வைக்கப்படும். 27, 30 மற்றும் 31ம் தேதிகளில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவித்து விவாதம் நடைபெறும். பிப்ரவரி 1ம் தேதி ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவித்து முதல்வர் பேசுவார். அன்றே சட்டசபை தொடர் முடிவடையும் என்றார்.