உளவியல் ஆலோசனை தொடர்பில் முறையான பயிற்சியை பெற்ற ஆசிரியர்களை புதிதாக இணைத்துக் கொள்ள நடவடிக்கை எடுக்குமாறு கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம், அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். உளவியல் ஆலோசனை தொடர்பில் புதிதாக 2 ஆயிரத்து 753 ஆசிரியர்களை கல்விக் கட்டமைப்பிற்குள் உள்வாங்குமாறு கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார். தற்போதைய சமூகங்கள் மத்தியில் பாடசாலை மாணவர்கள் பல்வேறு உளவியல் பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர்.
இதன் காரணமாக அவர்களது கல்வி மற்றும் சமூக செயற்பாடுகளுக்கு பாதிப்புக்கள் ஏற்படுவதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். எனவே, பாடசாலைகளில் சிறந்த தொடர்பாடல்கள் மூலம் பிரச்சினைகளைத் தீர்க்கக்கூடிய ஆசிரியர்களின் சேவையைப் பெற்றுக் கொள்வதே இதன் நோக்கமாகும். இதற்கமைய 300 இற்கும் மேற்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு உளவியல் ஆலோசனைகளை வழங்குவதற்காக ஆசிரியர்கள் இணைத்துக் கொள்ளப்படவுள்ளனர். இவ்வாறான 3 ஆயிரத்து 768 பாடசாலைகள் காணப்படுகின்றன.
தற்போது ஆயிரத்து 39 ஆசிரியர்கள் உளவியல் ஆசிரியர் சேவையில் தற்காலிக பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அவர்கள் தமது தகுதிகளைப் பூர்த்தி செய்த பின்னர் உளவியல் ஆலோசகர்களாக நியமிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசகம் குறிப்பிட்டுள்ளார்.