லிந்துலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட லிந்துலை மெராயா – ஊவாக்கலை தோட்டத்தில் பாதை திருத்தப் பணியில் ஈடுப்பட்டுக் கொண்டிருந்த நீர் தாங்கியை கொண்ட இழுவை வண்டி ஒன்று வீதியை விட்டு விலகி அதே தோட்டப்பகுதியில் சுமார் 600 அடி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளாகியதில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
21.12.2016 அன்று புதன்கிழமை மாலை 6.45 மணியளவில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக லிந்துலை போக்குவரத்து பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இதில் ஒருவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்ததுடன், மற்றொருவர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்திருப்பதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.
வாகனத்தின் இயந்திர கோளாறு காரணமாகவே இவ்விபத்து நேர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வாறு உயிரிழந்தவர்களான லிந்துலை – ஊவாக்கலை தோட்டத்தைச் சேர்ந்த வன்னராஜா சரன்ராஜ் (வயது – 26), ஞானபண்டிரம் சுரேந்திரன் (வயது – 37) என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இவ்வாறு உயிரிழந்தவர்களின் சடலங்கள் லிந்துலை பிரதேச வைத்தியசாலையில் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், பிரேத பரிசோதனைகளின் பின் சடலங்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் என வைத்தியசாலை வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.
இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை லிந்துலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
