எம்.வை.அமீர் -
நிரந்தர சமாதானத்தையும் தேசிய நல்லிணக்கத்தையும் ஊக்குவித்தலில் ஊடகங்களின் வகிபங்கு எனும் தொனிப்பொருளில், சட்டம் மற்றும் சமூக நம்பிக்கை நிதியம் ஏற்பாடு செய்திருந்த இரண்டு நாட்களைக்கொண்டதான அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர்களுக்கான வதிவிட செயலமர்வு 2016-07-30 ஆம் திகதியும் 2016-07-31 ஆம் திகதியும் கல்முனை சூப்பர்ஸ்டார் வரவேற்பு மண்டபத்தில் குறித்த நிறுவனத்தின் சிரேஷ்ட நிகழ்ச்சித்திட்ட அதிகாரி சிரேஷ்ட சட்டத்தரணி குகதாசன் ஐங்கரன் தலைமையில் இடம்பெற்றது. இங்கு இலங்கை ஊடகக்கல்லுரியின் விரிவுரையாளர் எஸ்.ரி.ஸ்ரீபிருந்திரனும் கலந்து ஆக்கபூர்வமான விடயங்களை பதிவிலிட்டார்.
செயலமர்வின்போது நாட்டில் சமாதானத்தினையும் நல்லிணக்கத்தினையும் நிலைநாட்டுவதற்கு ஊடகங்கள் வகிக்கக்கூடிய பங்குகள் பற்றியும் அதற்கான அவசியம் பற்றியும் பல்வேறு தலைப்புக்களில் ஆராயப்பட்டதுடன் நாட்டில் நிரந்தர சமாதானத்துக்கும் நல்லிணக்கத்துக்கும் உள்ளூரிலும் சர்வதேசதேசத்திலும் முன்வைக்கப்படும் தீர்வுகள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டது.
இதன்போது குறித்த இலக்கை அடைவதற்காக ஊடகங்கள் ஆற்றிய பங்கு போதுமானதல்ல என்ற கருத்தும் முன்வைக்கப்பட்டது. பத்திரிகைத்துறையில் நிலைமாறுகாலநீதி (Transitional Justice) பிரயோகிக்கப்படுமானால் மக்களின் அடிமட்ட மற்றும் தற்போது தேவைப்படும் தீர்வை எட்டமுடியும் என்றும் பத்திரிகையாளர்களின் பங்கு இதில் பிரதானமானது என்ற கருத்தும் தர்க்கரீதியாக இங்கு முன்வைக்கப்பட்டது.
பத்திரிகையாளர்கள் களத்துக்குச் சென்று இருபக்க நியாயங்கள் மற்றும் அவர்கள் தரப்பு நியாயங்களை பதிவிடும் வழிமுறைகள் தொடர்பிலும் அதனுடாக நாட்டின் சமாதானத்துக்கும் நல்லிணக்கத்துக்கும் பத்திரிகையாளர்கள் வகிக்கக்கூடிய பங்கு பற்றியும் இங்கு பிரஸ்தாபிக்கப்பட்டது.