பாறுக் ஷிஹான்-
யாழ்ப்பாணம் முஸ்லீம்களிற்கு தேவையான சகல விடயங்களும் செய்து கொடுக்கப்படும் என அமைச்சர் ரிசாட் பதியுதீன் தெரிவித்துள்ளார். இன்றைய தினம் (16) செவ்வாய்க்கிழமை யாழிற்கு அரேபியர்களுடன் விஜயம் செய்த அவர் மேற்கண்டவாறு கூறினார்.
யாழ் மஜ்ஜிதுல் மரியம் ஜும்மா பள்ளிவாசலில் மக்களுடனான சந்திப்பு ஒன்றை அடுத்து அமைச்சருடன் இணைந்து சவுதிஅரேபியா,குவைத் நாடுகளை சேர்ந்த அரேபியர்கள் மக்கள் முன் இவ்வாறு குறிப்பிட்டனர். யாழ் முஸ்லீம் மக்களிற்கு தேவையான அடிப்படை பிரச்சினைகள்,புதிய வீடமைப்பு,காணிகள் வழங்குதல் என்பன இங்கு ஆராயப்பட்டன.
தொடர்ந்து யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மதிரஸாக்கள்,உடைந்த வீடுகளை அமைச்சருடன் இணைந்து அரேபியர்கள் அவதானித்தனர்.
இந்த அவதானிப்புக்களை அரபு மொழியில் மௌலவி பைசர் மதனி மொழிபெயர்த்து அரேபியர்களுக்கு விளக்கமளித்தார்.
இக்குழுவினருடன் அமைச்சரின் மீள்குடியேற்ற இணைப்பாளரும் மக்கள் பணிமனை தலைவருமான சுபியான் மௌலவி,தகவல் வழிகாட்டல் நிலையம் பொறுப்பாளர் எம்.நிபாஹீர்,யாழ் கிளிநொச்சி முஸ்லீம் சம்மேளன தலைவர் ஜமால் முகைதீன்,உப தலைவர் கே.எம் நிலாம்,சமூக சேவகர் எம்.ராஜு,உள்ளிட்டோர் இணைந்திருந்தனர்.