இக்பால் அலி-
நல்லாட்சியில் எல்லோருக்கும் ஒரு சமமான நல்வாழ்வு அளிக்கப்பட்டு எல்லா வகையிலும் எல்லாத் தேவைகளையும் சகல மக்களும் அனுபவிக்க வேண்டும் என்ற மாண்பு முறையாகப் பேணப்பட்டு வருவதை நாங்கள் பார்க்கின்றோம். மக்களின் வாழ்வின் மீள் எழுச்சித் திட்டத்தின் கீழ் எமது ஹரிஸ்பத்துவ தேர்தல் தொகுதியிலும் பல்வேறு அபிவிருத்திப் பணிகள் எந்தப் பாகுபாடுகளுமின்றி சமமான முறையில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
அதேவேளை எமது பகுதிக்கு பொது தொண்டு நிறுவனங்கள் ஊடாக வரும் பணிகளும் சமமான நிலை பேணப்பட்டு அபிவிருத்திப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அந்தவகையிலேதான் எமது பகுதியில் கூட பொருளாதார வசதியின்மையால் சுத்தமான குடி நீரைப் பெற்றுக் கொள்ள வழியின்றி உள்ளார்கள். அவர்களை இனங் கண்டு இந்நீரைப் பெற்றுக் கொடுக்க நாங்கள் முன்வந்துள்ளோம் என்று முஸ்லிம் சமயம் கலாசாரம் மற்றும் தபால் துறை அமைச்சர் எம். எச். ஏ. ஹலீம் தெரிவித்தார்.
முஸ்லிம் சமய கலாசாரம் மற்றும் தபால் துறை அமைச்சர் எம். எச். ஏ. ஹலீமின் வேண்டுகோளின் பிரகாரம் எம்.எப்.சீ.டி இஸ்லாமிய நிறுவனத்தினால் ஹரிஸ்பத்துவ தேர்தல் தொகுதியில் சுத்தமான குடி நீர் இணைப்பைப் பெற்றுக் கொள்வதற்காக நிதி உதவி வழங்கும் நிகழ்வு கண்டி மாவில்மடவையிலுள்ள அமைச்சரின் அலுவலகத்தில் 12-04-2016 நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட முஸ்லிம் சமயம் கலாசாரம் மற்றும் தபால் துறை அமைச்சர் எம். எச். ஏ. ஹலீம் இவ்வாறு இதனைத் தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து பேசுகையில்:
ஹரிஸ்பத்துவ தேர்தல் தொகுதி பல்லின மக்கள் வாழுகின்ற தேர்தல் தொகுதியாகும். இந்த தேர்தல் தொகுதி ஏனைய தேர்தல் தொகுதிகளை விட இந்த தேர்தல் தொகுதி நாட்டின் தேசிய ஒற்றுமைக்கும் சகவாழ்வுக்கும் முன்மாதரியான தேர்தல் தொகுதியாகும். இந்தப் பகுதியில் வாழும் சிங்கள, முஸ்லிம்.
தமிழ் ஆகிய சமூகங்களுக்கிடையிலா நல்லுறவு பல நூற்றாண்டு காலமாக எவ்வகையிலான மனக்கசுப்புக்களுமின்றி ஒன்றுபட்டு வாழும் வரலாற்றுச் சான்றைக் கொண்டதாக இருக்கிறது என்பது முக்கிய அம்சமாகும். எனவே இந்த ஒற்றுமைக்கு மேலும் வலுசேர்க்கக் கூடியதாக நல்லாட்சி மலர்ந்துள்ளது என்று அவர் மேலும் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் அமைச்சரின் பொது சன தொடர்பு அதிகரி பீ.எம்.ஜீ.எம்.ஆர் இஸ்மாயீல் மலீக், எம்.எப்.சீ,டீ நிறுவன அதிகாரிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.


