சுலைமான் றாபி-
அண்மையில் ஈரானில் நடைபெற்ற கனிஷ்ட ஆசிய கபடி சுற்றுப் போட்டியில் இலங்கை அணி சார்பாக பங்கு பற்றிய ஒரே ஒரு முஸ்லிம் வீரரும், நிந்தவூர் மதீனா விளையாட்டுக் கழகத்தின் சிரேஷ்ட வீரருமான "மதீனத்து மாவீரன் எம்.ரி.அஸ்லம் சஜா" இந்நாட்டிற்கும் அவரின் சொந்த ஊரான நிந்தவூரிற்கும் பெருமை சேர்த்தமைக்காகவும், இந்த கபடி சுற்றுப் போட்டியில் இலங்கை அணி 3ம் இடத்தினைப் பெறுவதற்கு பிரதான காரணிகளில் ஒருவராக செயற்பட்டமைக்காகவும் அவரை வாழ்த்தி வரவேற்கும் நிகழ்வொன்றினை இன்று (19) மாலை நிந்தவூர் மதீனா விளையாட்டுக் கழகம் ஒழுங்கு செய்திருந்தது.
இவ்வரவேற்பு நிகழ்வில் எம்.ரி. அஸ்லம் சஜாவின் பெற்றோர்கள், நிந்தவூர் பிரதேச செயலாளர் திருமதி ஆர்.யு. அப்துல் ஜலீல், நிந்தவூர் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், அம்பாறை மாவட்ட கபடி பயிற்றுவிப்பாளர் ஏ.எல். அனஸ் அஹமட், நிந்தவூர் பிரதேச விளையாட்டு உத்தியோகத்தர் எம்.எச்.எம். அஸ்வத், மதீனா விளையாட்டுக் கழகத்தின் தலைவரும் ஆசிரியருமான ஏ.எம். அன்சார் உள்ளிட்டோர்கள் கலந்து கொண்டதுடன்,
இவரின் கபடி துறை முன்னேற்றத்திற்குப் பங்களிப்புச்செய்த ஆசிரியர்கள், நிந்தவூர் விளையாட்டு அபிவிருத்தி மற்றும் சமூக சேவைகள் ஒழுங்கமைப்பின் பிரதிநிதிகள், இராணுவ அதிகாரிகள், சமூக சேவை அமைப்புக்களின் பிரதிநிதிகள், பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், விளையாட்டு, இளைஞர் கழகங்களின் உறுப்பினர்கள் என அனைவரும் கலந்து கொண்டனர்.
இதேவேளை நிந்தவூர் மதீனா விளையாட்டுக் கழகமானது அதன் கழக வீரர்களை கபடி, கரப்பந்து, மெய்வல்லுனர் போன்ற துறைகளில் பிரகாசிக்கச் செய்வதோடு அவர்களின் திறமைகளை சர்வதேச ரீதியிலும் கொண்டு சென்றுள்ளது.
அந்த வகையில் இந்த கபடி துறையின் மூலமாக நிந்தவூர் மதீனா விளையாட்டுக் கழகமானது கிழக்குப் பகுதியில் பிரசித்தி பெற்று விளங்குவதோடு பாடசாலை மட்டப் போட்டிகளிலும் நிந்தவூர் மதீனா மஹா வித்தியாலய மாணவர்களும் பல்வேறு சாதனைகளைப் புரிந்துள்ளனர். இதனாலேயே நிந்தவூர் மதீனா விளையாட்டுக் கழகம் "கபடி ராஜாக்களாக" கிழக்கிலங்கை முழுவதும் பிரகாசித்து வருவதோடு, அவர்களின் முன்னேற்றங்கள் தேசிய மற்றும் சர்வதேச ரீதியிலும் சென்றடைந்துள்ளது.
இதனாலேயே அண்மையில் இவ்விளையாட்டுக் கழகம் சார்பாக 03 வீரர்கள் வெளிநாட்டில் இடம்பெற்ற விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொண்டதும் குறிப்பிடத்தக்கதாகும்.