எம்.ஏ.றமீஸ்-
ஒரு நாட்டில் ஆட்சி செய்யும் அரசாங்கம் மக்களுக்கு சாதகமான ஆட்சியினை முன்கொண்டு செல்லவில்லையாயின் நான்கைந்து வருடங்கள் கடந்துவிட்ட நிலையில்தான் அவ் அரசுக்கு எதிராக பொதுமக்கள் வீதியில் இறங்குவார்கள் ஆனால் நல்லாட்சி ஏற்படவேண்டும் என ஒருமித்து வாக்களித்த நம் நாட்டு மக்கள் நல்லாட்சியில் நன்மைகள் கிட்டவில்லை என்று ஆட்சி பீடம் ஏறிய அரசுக்கெதிராக ஆறு மாதங்களுக்குள் வீதியில் இறங்கிப் போராடுகின்றார்கள் என தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ஏ.எல்.எம்.அதாஉல்லா தெரிவித்தார்.
தேசிய காங்கிரஸ் கட்சியின் 12வது பேராளர் மாநாடு அக்கரைப்பற்று அதாஉல்லா அரங்கில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு மாநாட்டு பேரூரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இதன்போது தொடர்ந்தும் அவர் உரையாற்றுகையில்,
ஆட்சி மாற்றம் வேண்டும் என்று ஏழை மக்களும் ஜீவனோபாயத்தினை நம்பி விவசாயம் செய்யும் ஏழை விவசாயிகள் போன்றோர் நல்லாட்சி அரசாங்கத்திற்கு வாக்களித்தார்கள். இவ்வாறு வாக்களித்த இம்மக்கள் இந்நல்லாட்சியில் எமக்காக நன்மைகள் எதுவும் ஏற்படவில்லை என்று வாக்களித்த கையோடு வீதியில் இறங்கி போராட்டங்களை நடத்துகின்றார்கள்.
விவசாயிகளுக்கு உரமானியம் இல்லை. நாங்கள் வேண்டுமென்று அலைய விடப்படுகின்றோம் நெல்லுக்கும் விலையில்லை அரிசிக்கும் விலையில்லை என்று போராட்டங்களை நடத்துகின்றனர். எந்த நாட்டிலும் இல்லாதவாறு விவசாயிகள் இந்நாட்டில் தற்போது பாதிக்கப்பட்டிருக்கின்றார்கள். அதுமட்டுமல்லாமல் அரச உத்தியோகத்தர்களுக்கு 10 ஆயிரம் ரூபா அதிகரிப்பென்ற போர்வையில் 30 ஆயிரத்திற்கும் அதிகமான சுமையினை இவ் அரசாங்கம் அவர்கள் மீது சுமத்தியிருக்கின்றது.
விவசாயிகளை ஊக்குவிப்பதற்கான நடவடிக்கைகள் ஏதும் இவ் அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படவில்லை. உற்பத்திகளை அதிகரித்து நுகர்வோருக்கு சாதகமான விலையில் அரிசியினை வழங்கக் கூடியதான நிலைமை இவ் அரசாங்கத்தில் இல்லை.
இந்த அரசாங்கத்தில் அபிவிருத்திகள் நடைபெறவில்லை. மக்கள் மீது பொருளாதாரச் சுமை வேண்டுமென்று சுமத்தப்பட்டிருக்கின்றது. பொருட்களின் விலை அதிகரிக்கின்றன. நல்லாட்சியில் நன்மைகள் கிடைக்கும் என எதிர்பார்த்தவர்கள் நாளுக்கு நாள் வீதியில் இறங்கிப் போராடும் நிலைமைதான் அதிகரித்துள்ளன.
கட்சியொன்றின் மாநாடு நடக்கின்றதாயின் அக்கட்சி சார்ந்த மக்களினதும் சமூகத்தினதும் நன்மைகளை முன்னிறுத்தியதான செயற்பாடுகளுக்கு அம்மாநாடுகள் அடித்தளமிடுவதாக அமைய வேண்டும். அவ்வாறான செயற்பாடுகளை தேசிய காங்கிரஸ் கட்சி கடந்த காலங்களில் செய்து காட்டியிருக்கின்றது. இந்த நாட்டில் எந்தக் கட்சியும் நடத்தாதளவு மாநாடுகளை எமது கட்சி நடத்தியிருக்கின்றது. மாநாடுகளை நாம் நடத்துகின்றபோது மக்களுடையதும் சமூகத்தினுடையதுமான தேவைகளை பிரகடனப் படுத்தியிருக்கின்றோம்.
கடந்த 2005ஆம் ஆண்டு எமது தேசிய காங்கிரஸ் கட்சி வரலாற்றுத் தடயமாக மாபெரும் மாநாடொன்றை நடத்தி அம்மாநாட்டுக்கு ஜனாதிபதி வேட்பாளரைக் கொண்டு வந்து எமது மக்களுக்கான கோரிக்கைகளை முன்வைத்தோம். மாநாட்டுக்கு வருகை தந்த ஜனாதிபதி வேட்பாளர் வெற்றி பெற்று நாம் வேண்டி நின்ற மூன்று முக்கிய தேவைகளை நிறைவேற்றித் தந்தார். இதன்மூலமாக எமது முழு நாடுமே பயன் பெற்றது.
நாம் வேண்டியதற்கிணங்க நீடித்த பயங்கரவாதம் முடிவுக்கு கொண்டுவரப்பட வேண்டும், வடக்கிலிருந்து கிழக்கு மாகாணம் பிரிக்கப்பட வேண்டும், நாட்டில் சமாதானம் நிலைநாட்டப்பட வேண்டும் என்ற அக்கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டதனால்தான் நாம் இன்று பல்வேறான நன்மைகளைப் பெற்றுக் கொண்டிருக்கின்றோம்.
கட்சியின் மாநாடுகள் நாம் நடத்திக் காட்டியதைப்போல் இடம்பெற வேண்டும். மாறாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி அண்மையில் பாலமுனையில் நடத்திய மாநாடுபோல் அமையக்கூடாது. இம்மாநாட்டுக்கு நாட்டிலுள்ள முக்கிய தலைமைகள் அழைக்கப்பட்டு வருகை தந்திருந்தனர். அதுமட்டுமல்லாமல் வெளிநாட்டுத் தூதுவர்கள் துறைசார்ந்தோர் எனப் பலர் சமூகமளித்தனர்.
இவர்கள் அனைவரும் இருக்கத்தக்கதாக எம்நாட்டு முஸ்லிம்களுக்கு தேவையான விடயங்கள் இங்கு பேசப்பட்டு அதற்கான தீர்வினைப் பெற்றுத்தரக்கூடிய களமாக அது அமைக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைமை அவ்வாறு எதனையும் செய்யவில்லை.
அரசில் யாப்பு மாற்றத்தில் என்னெ;ன விடயங்கள் உள்ளடக்கப்பட வேண்டும், நாட்டிலுள்ள முஸ்லிம் மக்களுக்கு கிடைக்க வேண்டிய முக்கிய விடயங்கள் பேசப்பட்டிருக்க வேண்டும், நமது மக்களுக்கான காணிப்பிரச்சினைகள் பற்றி பேசப்பட்டிருக்க வேண்டும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தனிடம் முஸ்லிம் மக்களை தனி ஒரு இனமாக அங்கீகரியுங்கள் என்று கேட்கப்பட்டிருக்க வேண்டும், ஜனாதபரி மற்றும் பிரதமர் ஆகியோர் முஸ்லிம்கள் தனியோர் இனம் உங்களுக்கு தனி அலகு தரப்பட்டு உங்களையும் நாம் பாகுகாப்போம் என்று அவர்கள் வாக்குறுதியளித்திருக்க வேண்டும்.
முஸ்லிம்கள் ஒன்று திரண்டு ஜனாதிபதிக்கு வாக்களித்திருக்கின்றோம் உங்கள் ஆட்சியில் எமது பிரச்சினைகள் தீர்க்கப்படல் வேண்டும் என்று மு.கா தலைமை சொல்லியிருக்க வேண்டும்.
ஆனால் என்ன நடந்தது? தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தனுக்கு மு.கா மாநாட்டில் களம் அமைத்துக் கொடுக்கப்பட்டிருக்கின்றது. அம்மாநாட்டில் பங்கு கொண்ட அவர் உரையாற்றுகின்றபோது தமிழ் மக்கள் உயிர்த்தியாகம் செய்தவர்கள் அம்மக்கள் போராடியவரகள் சொத்துக்களை இழந்தவர்கள் நாம் அதிகாரத்தினைப் பெறுவதற்கு நீங்களும் உதவி செய்யுங்கள் என்று கருத்தினைத் தெரிவித்தார்.
அதுட்டுமல்லாமல் அண்மையில் மட்டக்களப்பில் நடைபெற்ற மு.காவின் அரசியலமைப்பு திருத்தம் தொடர்பான கலந்துரையாடலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சம்பந்தனை அழைத்து ஏற்கனவே தீர்மானிக்கப்பட்ட விடயங்கை அரைத்த மாவை மீண்டும் அரைப்பது போல் சில விடயங்களை பேசியிருக்கின்றார்கள்.
முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தற்போதைய நிலைமை சிலருக்கு இப்போதுதான் புரிந்திருக்கின்றது. நாம் கடந்த 15 வருடங்களுக்கு முன்னர் கூறிய உண்மைகள் இப்போதுதான் அக்கட்சியின் செயலாளர் நாயகம் உள்ளிட்டோருக்கு புரிந்திருக்கின்றது. கட்சியின் சரிவை உணர்ந்த மு.கா தலைமை கிழக்கில் ஸ்திரத்தன்மையினை ஏற்படுத்துவதற்கும் சிலரை வேண்டுனெ;று தூசிப்பதற்குமே அத்தலைமை மாநாட்டை நடத்தியுள்ளது.
கட்சி என்பது கொள்கைகளை முன்னிறுத்தி மக்களை அழைத்து மக்களுக்கான தீர்வினைப் பெற்றுக் கொடுக்க வேண்டும். அந்நடைமுறையினைத்தான் தேசிய காங்கிரஸ் கட்சி செய்து வருகின்றது. இந்த நாட்டுக்கு மீண்டுமொரு சுதந்திரத்தினை பெற்றுக் கொடுப்பதற்கு எமது கட்சி முக்கிய பங்காற்றியிருக்கின்றது. எமது கட்சி நமது மக்களுக்கான உரிமைகளை வென்றெடுப்பதிலும் பாரிய அபிவிருத்திகளையும் செய்வதிலும் ஏனையோருக்கு முன்னுதாரணமாக இருந்திருக்கின்றது.
அரசியலிலிருந்து மக்களை விலைபேசக்கூடிய நிலையிலிருந்து நாம் மக்களை மாற்றிக் காட்டியிருக்கின்றோம். மறைந்த தலைவர் மர்ஹும் எம்.எச்.எம்.அஷ்ரஃப் வழியில் நின்று கட்சியினை முன்னகர்த்தி வருகின்றோம். அவர் மக்களை விற்று அரசியல் செய்யவில்லை. ஆனால் அவருக்கு பின்னர் கட்சியின் தலைமைப் பொறுப்பினை பெற்றவர் கிழக்கு மக்களை விரும்பியவாறு விரும்பிய திசைக்கு இட்டுச் செல்லலாம் என்ற நிலைப்பாட்டின்கீழ் யார் அதிகம் கொடுக்கின்றார்களோ அவர்களின்பால் கிழக்கு மக்களை விலைபேசி விற்கின்ற சூழல் தோற்றுவிக்கப்பட்டிருக்கின்றது.
நோர்வே ஒப்பந்தத்தில் எவ்வளவு தொகை வாங்கப்பட்டது, கடல் கடந்த தமிழர்களிடம் கைபொம்மையாக இருப்பதற்கு எவ்வளவு தொகை பெறப்பட்டது, முஸ்லிம்களை இஸ்லாமியத் தமிழர்கள் என்று பெயர் சூட்டப்படுவதற்கு எவ்வளவு தொகை பணம் மு.கா தலைமையால் வாங்கப்பட்டது என்று எல்லோரும் பேசிக் கொள்வதனை நாம் நன்கு உணர்ந்து கொள்ள வேண்டும்.
ஆனால் எமது தேசிய காங்கிரஸ் கட்சி இவ்வாறு மக்களை விற்று வயிறு வளர்த்ததென்று முடிந்தால் யாராவது முன்வந்து சொல்லட்டும். நாம் அவ்வாறு ஒரு பொழுதும் செய்யவில்லை. எமது கட்சி மக்களை முறையாக வழிநடத்தியிருக்கின்றது. மக்களுக்கான பல விடயங்களை பெற்றுக் கொடுத்திருக்கின்றது.
அரசியல் கட்சியின் தலைமைகள் சரியான முடிவுகளை எடுக்க வேண்டும். மக்கள் அதிகம்பேர் சென்றுவிட்டார்கள் என்பதற்காக மக்கள் பக்கம் சென்று எடுப்பதல்ல தீர்மானம். ஏதிர்கால சந்ததியினரும் நிகழ்கால சமூகமும் பயன் பெறும் வகையில் தலைமைகள் முடிவுகளை எடுக்க வேண்டும். நாம் எடுத்த தீர்மானம் மக்களுக்கு விளங்கிக் கொள்வதற்கு சிறிது காலம் செல்லும்.
காலம் கனிகின்றபோது நாம் செய்தது சரியென்று நிச்சயம் புரிந்து கொள்வார்கள். மறைந்த தலைவர் மர்ஹும் அஷ்ரஃப் அவர்கள் அக்காலப் பகுதியல் எடுத்த தீர்மானங்கள் சிலவற்றை மக்கள் அறிந்து கொள்ளவில்லை பிற்காலத்தில் எவர் எடுத்த தீர்க்க தரிசனம் மிக்க முடிவினை எண்ணி வியந்திருக்கின்றார்கள் அவ்வாறான நிலை எமது செயற்பாட்டிலும் ஏற்படும் அதுவரை சற்று நாம் பொறுத்திருக்க வேண்டும் என்றார்.
இதன்போது இலங்கைத் திருநாட்டின் தற்கால அரசியல் பொருளாதார நிலைமையினைக் கருத்திற்கொண்டு குடிமக்களின் நலனோம்புகை இனங்களுக்கிடையிலான சகவாழ்வு அனைவருக்குமான வளமான எதிர்காலம் என்பவற்றை முன்னிறுத்தி 12 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
அவையாவன, மக்களால் நேரடியாக தெரிவு செய்யப்படுகின்ற நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை தற்போதுள்ளது போன்று தொடர வேண்டும், மக்கள் பிரதிநிதிகளைத் தெரிவு செய்வதற்கான மாகாண சபை மற்றும் பாராளுமன்றத் தேர்தல்கள் தற்போது நடைமுறையில் உள்ள விகிதாசாரத் தேர்தல் முறையிலேயே தொடர்ந்தும் நடத்தப்படல் வேண்டும், இனம் மத மொழி போன்ற விடயங்கள் தொடர்பில் மக்கள் குழுக்களுக்கிடையிலான குரோதங்களையும் வன்முறைகளையும் தூண்டும் விதமான பேச்சுக்கள் நடவடிக்கைகளுக்கெதிராக சட்ட நடவடிக்கைகள் அரசியல் அமைப்பின் மூலம் உத்தரவாதப்படுத்தப்படல் வேண்டும்.
மற்றும் கிழக்கு மாகாணம் வடக்கு மாகாணத்துடன் இணைக்கப்படக்கூடாது, ஏதாவது சந்தர்ப்பத்தில் அரசு வடக்கு கிழக்கு மாகாணங்களை இணைப்பதற்கு உடன்படுமாயின் அச்சந்தர்ப்பத்தில் சம அந்தஸ்த்துள்ள தமிழர்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட ஒரு மாகாணமும் அமையப் பெறும் விதத்தில் மாகாணங்களின் எல்லைகள் திருத்தியமைக்கப்படல் வேண்டும்.
இலங்கையர்கள் என்ற அடையாளத்தினை முதன்மைப்படுத்தி ஒவ்வொரு பிரஜையும் இன மத மொழி நம்பிக்கை சார்ந்த அடையாளங்களுக்கு குந்தகம் இல்லாமல் சம அந்தஸ்த்துடன் சுதந்திரமாக வாழ்வதற்கான சகல உத்தரவாதங்களையும் அரசில் அமைப்பினூடாக வகுத்தல் வேண்டும்.
இது தவிர மக்களின் உடனடிப்பிரச்சினைகள் தொடர்பில் பின்வரும் தீர்மானங்களை இம்மாநாட்டில் முன்வைக்கப்பட்டன. அவையாவன, விவசாய சமூகம் தற்போது எதிர்கொள்ளும் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் அரசு உடனடிச் தீர்வுகளை வழங்க வேண்டும், அரசினாலும் அமைச்சர்களினாலும் மேற்கொள்ளப்படும் சகலவிதமான அரசியல் பழிவாங்கல்களும் உடனடியாக நிறுத்தப்படல் வேண்டும்.
தற்போது காலதாமதமாகியுள்ள உள்ளுராட்சி மன்றத் தேர்தல்தல்களை மேலும் காலதாமதமின்றி நடத்துவதன் மூலம் மக்களின் ஜனநாயக உரிமைகளை வழங்குவதற்கு அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும், யுத்த காலங்களிலும் அதன் பின்னரும் மக்களிடமிருந்து விடுதலைப் புலிகளினாலும் அரசினாலும் அரச நிறுவனங்களினாலும் ஏனைய அதிகார சக்திகளாலும் அபகரிக்கப்பட்ட விவசாய மற்றும் குடியிருப்புக் காணிகள் மீண்டும் உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட வேண்டும்.
வடமாகாணத்திலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களும் அவர்களது வம்சாவழியினரும் தமது சொந்த இடங்களில் மீள்குடியமர்வதற்கான சகல தடைகளையும் நீக்குவதுடன் உட்கட்டமைப்பு வசதிகளையும் அரசு செய்து கொடுக்க வேண்டும்.
மற்றும் விடுதலைப் புலிகளினாலும் ஆயுதக் குழுக்களினாலும் முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட படுகொலைகள் சொத்தழிப்புக்கள் பொருளாதார நஷ்டங்கள் போன்றவற்றுக்காக நிவாரணம் வழங்குவதற்காக மீள் இணக்கப்பாடு உண்மை அறியும் ஆணைக்குழு மனித உரிமைகள் விசாரணை போர்க்குற்ற விசாரணை போன்ற அனைத்து விசாரணைகளும் 1980ம் ஆண்டில் இருந்து தொடங்கப்படல் வேண்டும் என்ற கோரிக்கைகள் பிரகடனமாக நிறைவேற்றப்பட்டன.