★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★
★ஜெம்ஸித் அஸீஸ்★
குற்றுயிராகிக் கிடக்கிறது தமிழகம்.
மூலை முடுக்கெங்கும் வெள்ளம்.
சில இடங்களில் 10 அடிக்கும் மேல் வெள்ளம்.
இரண்டு வாரமாக மின்சாரம் துண்டிக்கப்பட்டிருக்கிறது.
இருளில் நீரில் மிதக்கிறது தமிழகம்.
ஒரு நூற்றாண்டு வரலாறு கண்டிராத வெள்ளம் இது.
இயல்பு வாழ்க்கை முற்றாக சிதைந்திருக்கிறது.
வெள்ள நீருக்குள் நின்று ஒரு சொட்டு குடிநீருக்காக திண்டாடுகிறார்கள் மக்கள்.
படங்களை, காணொளிகளைப் பார்கிறபோது
கண்களில் வெள்ளம்.
மக்களின் குறிப்பாக முஸ்லிம்களின் மனிதநேய உதவிகளைப் பார்க்கிறபோது உள்ளத்தில் வெள்ளம்.
“மழையினால் பாதிக்கப்பட்டவர்கள் தங்குவதற்காக சென்னையிலுள்ள அத்தனை பள்ளிவாசல் கதவுகளும் திறந்து வைக்கப்பட்டுள்ளன. சாதி,மத பேதமின்றி அனைவருக்கும் அனுமதி உண்டு” இந்த செய்தியை உண்மைப்படுத்தியுள்ளது மாலை மலர்.
சென்னை பார்த்தசாரதி கோவிலிலும் தஞ்சம் புகுந்துள்ளனர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள்.
அங்கும் இஸ்லாமிய சகோதரர்கள் குழுவாக இணைந்து அவர்களுக்கு உணவுப் பொட்டலங்களை வழங்கி உதவி செய்தனர்.
ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்தின் தமிழ் நாட்டுப் பிரிவு, தமிழ் நாடு தவ்ஹீத் அமைப்புக்கள்... என இஸ்லாமிய அமைப்பைச் சார்ந்தவர்கள்...
முஸ்லிம் அரசியல் கட்சி சார்ந்தவர்கள் களத்தில் இறங்கி மீட்புப் பணி மற்றும் நிவாரணப் பணிகளில் தொடர்ந்தும் ஈடுபட்டு வருகிறார்கள்.
தமிழகத்தில் வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆந்திர மாநிலத்திலுள்ள இஸ்லாமிய அரபுக் கல்லூரி (மத்ரஸா) பெருந் தொகையான நிவாரணப் பொருட்களை அனுப்பி வைத்துள்ளது.
ஆக, மனித நேய வெள்ளம் மழை வெள்ளத்துக்கு மேலால் பெருக்கெடுத்துப் பாய்கிறது இந்தியாவில்!
மனித நேயத்தின் மார்க்கம் இஸ்லாம் என்பதை நிரூபித்திருக்கிறார்கள் இந்திய முஸ்லிம்கள்.
அகோர அனர்த்தம் நிகழ்ந்திருக்கும் இத்தகைய நிலையில்…
வெள்ளத்தில் சிக்கி மரணித்து சிதைந்து போன இந்து மத அன்பரின் சடலத்தை முஸ்லிம்கள் பாடையில் வைத்து சுமந்து செல்கிற வேளையில்…
மரணத்தின் விளிம்பில் நின்ற கர்ப்பிணிப் பெண்ணுக்கு கை கொடுத்து பாதுகாப்பான பிரசவத்துக்கு ஏற்பாடு செய்து கொடுத்ததனால் பிள்ளைக்கு அந்த முஸ்லிம் இளைஞனின் பெயரை நாமமாய் சூட்டி மகிழ்ந்த செய்தியைப் படித்து பூரித்துப் போன நிலையில்…
(05.12.2015) இந்திய இணையதளமொன்றில் மற்றுமொரு செய்தியையும் பார்க்க கிடைத்தது. அதிர்ந்து போனேன்.
அயோத்தியில் ராமர் கோவிலை கட்ட இதுதான் நல்ல தருணம் என்று சிவசேனா தெரிவித்துள்ளது. தனது வாழ்நாளுக்குள் அயோத்தியில் ராமர் கோவில் கட்ட விரும்புவதாக ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் கூறியிருந்தார். இதனை வரவேற்றுள்ள சிவசேனா, அதற்கான திகதியை அறிவிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது. அயோத்தியில் ராமர் கோயிலை கட்டும் தைரியம் பிரதமர் நரேந்திர மோடிக்கு உண்டு. இந்த விவகாரத்தை அவர் கையில் எடுத்தால் அவரது செல்வாக்கு மேலும் அதிகரிக்கும்.
சிறுபான்மையினருக்கு மட்டுமே ஆதரவான அரசு என்ற எண்ணத்தை மாற்ற ராமர் கோயிலை மத்திய அரசு கட்ட வேண்டியது அவசியமாகும். இப்போது இல்லை என்றால் அயோத்தியில் ராமர் கோயிலை எப்போதுமே கட்ட முடியாது.
வெள்ளம் என்ன வெள்ளம் நெருப்பு மழை பொழிந்தாலும் ஆர்.எஸ்.எஸ்., சிவசேனா போன்ற பல சேனாக்களின் விஷம் கடுகளவாவது உருகி விடுமா? என்ற கேள்வியை எழுப்ப வேண்டியிருக்கிறது.
இந்தியர்களே! ஆர்.எஸ்.எஸ்., சிவசேனாக்களின் நச்சு சிந்தனைகளை இந்த வெள்ளத்தில் மூழ்கடித்து விடுங்கள். அவை மூச்சுத் திணறி மாண்டு போகட்டும்!
