ந.குகதர்சன்-
பொலநறுவை மாவட்டத்தின் வெலிக்கந்தை பொலிஸ் பிரிவில் செவனப்பிட்டி மகாவலி விடுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் ஒரு ஆணின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக வெலிக்கந்தை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கே.பி.டபள்யூ.பிரேம்லால் தெரிவித்தார்.
தூக்கில் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டவர் வாழைச்சேனை பிரதேசத்தை பிறப்பிடமாகவும், வெலிக்கந்தை பிரதேச செயலாளர் பிரிவில் கட்டுவன்வில் பிரதேசத்தை வசிப்பிடமாகவும் கொண்ட ஒரு பிள்ளையின் தந்தையான கயாத்து முஹம்மது அஸாப் (வயது – 36) என உரவினர்களால் அடையாம் காணப்பட்டுள்ளார்.
மரணமடைந்துள்ள அஸாப் என்பவர் கட்டுவன்வில் பிரதேசத்தில் இருந்து பஸ் மற்றும் புகையிரதங்களில் கடலை மற்றும் இனிப்பு பண்டங்களை வியாபாரம் செய்பவர் என்றும் வழமை போன்று வியாபாரத்திற்காக கடந்த ஞாயிற்றுக்கிழமை (06.12.2015) வீட்டில் இருந்து வெளியாகியவர் வீடு திரும்பாததால் அவரை தேடி எங்கும் கிடைக்காத சந்தர்ப்பத்தில் கடந்த 09.12.2015ம் திகதி அன்று உறவினர்களால் வெலிக்கந்தை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
உறவினர்கள் அவர் வியாபாரம் செய்யும் பகுதிகளில் தேடித்திறிந்த சந்தர்ப்பத்தில் மகாவலிக்குச் சொந்தமான பாலடைந்த விடுதி ஒன்றுக்குள் இருந்து துர்நாற்றம் வீசியதையடுத்து அந்த இடத்தில் சென்று பார்த்த போது குறித்தி நபர் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டதாகவும் அவர் அணிந்திருந்த சேட் மற்றும் அவர் வியாபாரத்திற்கு பயன்படுத்தும் கூடை என்பவற்றை அடையாளமாக வைத்து மரணித்தவர் கயாத்து முஹம்மது அஸாப் என அடையாளங்கண்டு பொலிஸாருக்கு தெரியப்படுத்தியதாக மரணித்தவரின் உறவினர்கள் தெரிவித்தனர்.
குறித்த இடத்திற்கு வருகை தந்த பொலநறுவை நீதவான் நீதிமன்ற பதில் நிதவான் சட்டத்தரணி சிரிபால ரணதுங்க மற்றும் பொலநறுவை போதனா வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி டாக்டர்.நாமல் பண்டார ஆகியோர் சடலத்தை பார்வையிட்டதுடன் மருத்துவ பரிசோதனைக்காக சடலத்தை பொலநறுவை போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்குமாறு பொலிஸாருக்கு பதில் நிதவான் சட்டத்தரணி சிரிபால ரணதுங்க வேண்டுகோள் விடுத்தார்.



