சுகாதார மற்றும் தொழில் அமைச்சின் நிதி ஒதுக்கீடுகள் தொடர்பான குழுநிலை விவாதம் நேற்று நாடாளுமன்றில் இடம்பெற்றது.
இதன்போது, சிறுநீரக நோய் ஏற்படுவதான வழிமுறைகளை ஆராய்ந்து அதனை நிவர்த்திக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம் மன்சூர் கோரிக்கை விடுத்தார்.
திருகோணமலை மாவட்டத்தின் சுகாதார துறை தொடர்பில் அதிக கனவம் செலுத்த வேண்டும் என இம்ரான் மஹரூப் குறிப்பிட்டார்.
அதிகரித்து வரும் நோய் நிலமைகளில் இருந்து மக்களை காப்பாற்ற அரசாங்கம் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளை நாடாளுமன்ற உறுப்பினர் இஸாக் ரகுமான் பாராட்டினார்.
வடக்கு மக்களின் உள நலம் பலவேறு காரணங்களால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அதனை நிவர்த்திக்க நடடிக்கை மேற்கொள்ள வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவமோகன் குறிப்பிட்டார்.
மருத்துவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த வாகன வரிச்சலுகை இந்த முறை பாதீட்டில் நீக்கப்பட்டமை குறித்து கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சீனிதம்பி யோகேஸ்வரன் கருத்து தெரிவித்தார்.
தோட்ட தொழிலாளர்களின் ஆயிரம் ரூபா வேதன உயர்வை அரசியல் தொகையாக நிர்ணயித்தவர்கள், இன்று அது குறித்து மௌனிகளாக இருப்பதாக, நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர், எம்.திலகராஜ் குற்றம் சுமத்தினார்.
திருகோணமலை மாவட்டத்தில் தாதியர் பயிற்சி பாடசாலை ஒன்று அமைக்கப்பட வேண்டியதன் அவசியம் குறித்து தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் துரை ரட்ணசிங்கம் வலியுறுத்தினார்.
பொருந்தோட்ட தொழிலாளர்களின் வேதன உயர்வு தொடர்பாக, தொழிலமைச்சர் உறுதி மொழி அளித்துள்ளதாக பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஸ் குறிப்பிட்டார்.
அத்துடன் மலையக மக்கள் அதிகளவில் கோதுமை மாவினை தேவைக்கு கொள்வதினால் அதன் விலையை குறைக்க வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்தார்.
