
மு.இ.உமர் அலி-
அம்பாறை மாவட்டம் பாலமுனையில் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் ஆரம்பிக்கப்பட்ட “இலங்கை விவசாயக்கல்லூரியில் விவசாய தொழில்நுட்ப கற்கை நெறியொன்று நடைபெற்றுவருவது அனேகம்பேருக்கு தெரியாத விடையம்.
இக்கல்லூரியில் அனுமதி பெறுவதற்கு அகில இலங்கை ரீதியில் போட்டிப்பரீட்சை நடாத்தப்பட்டு மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றார்கள்.
எதிர்வரும் ஆண்டுக்கான மாணவர்களை சேர்த்துக்கொள்வதற்கான விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது. இம்மாதம் 28 ஆம் திகதி விண்ணப்ப முடிவுத்திகதியாகும்.
க.பொ.த.உயர்தரம் வின்ஞானப்பிரிவில் ஏதாவது ஒரு பாடத்தில் சித்தியடைந்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.
எமது பிரதேச மாணவர்களுக்கு இது ஒரு வரப்பிரசாதமாகும். எதிர்வரும் காலங்களில் அதிகளவிலான மாணவர்கள் இங்கு விவசாயக்கற்கை நெறிகளை மேற்கொள்ளுவதற்கு இது வழிகோலும். பயிற்சி முடிவடைந்தவுடன் அரச துறைகளில் தொழில்வாய்ப்பு பெறுவதற்கான வாய்ப்புக்கள் அதிகமாகவும் காணப்படுவதாக இக்கல்லூரியின் அதிபரும் உதவி விவசாய பணிப்பாளருமான MFA ஜணீர் குறிப்பிட்டார்.
இக்கல்லூரியின் கற்பித்தல் செயற்பாடுகளை சிறப்பாக முன்னெடுப்பதற்காக விவசாயத் திணைக்களம் புதிதாக ஆறு விரிவுரையாளர்களை நியமனம் செய்துள்ளது. இவர்கள் அனைவரும் விவசாயத்துறையில் பட்டம் பெற்றவர்கள், அத்தோடு முதலாம் தர சித்தியெய்தியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இங்குள்ள பெளதீக வளங்களை அதிகரிப்பது தொடர்பாக அட்டாளைச்சேனை பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் அன்சீல் அவர்களது வேண்டுகோளிற்கு இணங்க பிரதியமைச்சர் பைசால் காசீம் முயற்சிகளை எடுத்து வருகின்றார்.