உலகலாவிய ரீதியில் இன்று (செவ்வாய்க்கிழமை) சர்வதேச எயிட்ஸ் தினம் அனுஷ்டிக்கப்படுகிறது.
‘இன்றே பரிசோதனை செய்வோம்-செயற்படுவதற்கான நேரம் இதுவே’ என்ற தொனிப்பொருளில் இம்முறை உலக எயிட்ஸ் தினம் அனுஷ்டிக்கப்படுகிறது.
எயிட்ஸ் நோய் தொடர்பில் தெளிவூட்டல் மற்றும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் முகமாக, இலங்கையில் இதன் பிரதான வைபவம் இன்று மட்டக்களப்பில் நடைபெறுகின்றது.
ஆண்டு தோறும் ஒவ்வொரு கருப்பொருளின் அடிப்படையில் டிசம்பர் மாதம் முதலாம் திகதி உலக எயிட்ஸ் தினம் கடைப்பிடிக்கப்பட்டு வருவது வழக்கம். எயிட்ஸ் நோய் மற்றும் அதன் விளைவுகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டே இந்நாள் உலகளாவிய ரீதியில் அனைவராலும் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.
எயிட்ஸ் தினம் பற்றிய எண்ணக்கரு முதலாவதாக 1988 ஆம் ஆண்டு நடைபெற்ற, எயிட்ஸ் பற்றிய உலக சுகாதார அமைச்சர் மாநாட்டில் உருவானது. அதன் பிறகு அரசுகளும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும் இந்நாளை உலகம் முழுவதும் நடைமுறைப்படுத்தி வருகின்றன. உலக அரங்கில் எயிட்ஸ் நோயை இல்லாது ஒழிக்க வேண்டும் என்ற நோக்கத்திலும் மக்கள் மத்தியில் எயிட்ஸ் தொடர்பான விழிப்புணர்வினை ஏற்படுத்தும் நோக்கிலேயே உலக எயிட்ஸ் தினம் அனுஷ்டிக்க ஆரம்பிக்கப்பட்டது.
Acquired Immune Deficiency Syndrome என்ற சொற்றொடரின் சுருக்கமே AIDS – எயிட்ஸ் என்பதாகும். அதாவது பெறப்பட்ட நோய்த் தடுப்பாற்றல் குறைபாடுகளின் நோய்க்கூட்டறிகுறி அல்லது பெறப்பட்ட மனித நோய் எதிர்ப்புத் திறன் குறைபாட்டு நோய்க்கூட்டறி குறி என்பது கருத்தாகும். மேலும் விரிவாகச் சொல்வதென்றால் எமது உடலில் தொற்றுகின்ற நோய்க் கிருமிகளை எதிர்த்துப் போராடி அக் கிருமிகளை அழித்து அல்லது கட்டுப்படுத்தி நோய்களில் இருந்து எமது உடலை பாதுகாப்பதற்காகப் போராடுகின்ற அமைப்பு நிர்ப்பீடணம் அல்லது நோய்த் தடுப்பாற்றல் நோய் எதிர்ப்பு சக்தி என அழைக்கப்படுகிறது.
