ஹாசிப் யாஸீன்-
உலக மலாய் அமைப்பின் தலைவரும், மலாக்காவின் முன்னாள் முதலமைச்சரும், தற்போதைய செனட்டரும், ஆளும் உம்னோ கட்சியின் பிரதித் தலைவருமான முஹம்மது அலி ருஸ்டாம் மற்றும் மலேசிய உயர் ஸ்தானிகர் தலைமையிலான குழுவினருக்கும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவரும் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸூக்கு மிடையேயான சந்திப்பு அண்மையில் தாஜ் சமுத்திர ஹோட்டலில் இடம்பெற்றது.
இச்சந்திப்பின் போது பிரதி அமைச்சர் எச்.எம்.எம். ஹரீஸ், இலங்கை இளைஞர்கள் உயர்கல்வியை மலேசிய பல்கலைக்கழகங்களில் மேற்கொள்வதற்கு வாய்ப்புக்களை ஏற்படுத்துதல் மற்றும் அதற்கான புலமைப்பரிசில்களை பெற்றுக்கொடுத்தல் சம்பந்தமாகவும், வறிய மக்களின் வாழ்வாதார மற்றும் சமூக நலத்திட்டங்களுக்கான உதவிகளை பெற்றுக்கொள்ளல் சம்பந்தமாகவும் கலந்துரையாடியதுடன் இதற்கான இணக்கமும் எட்டப்பட்டது.
இதன்போது உலக மலாய் அமைப்பின் தலைவரும், மலாக்காவின் முன்னாள் முதலமைச்சருமான முஹம்மது அலி ருஸ்டாம், எதிர்வரும் பெப்ரவரி மாதமளவில் மலேசியா மலாக்காவில் இடம்பெறவுள்ள உலக மலாய் அமைப்பின் மாநாட்டுக்கு பிரதி அமைச்சர் ஹரீஸை கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுத்துள்ளார்.


