க.கிஷாந்தன்-
தோட்ட தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வு தொடர்பாகவும் தீபாவளி முற்பணமாக 15000 ரூபா வழங்குவது தொடர்பாகவும் கூட்டு ஒப்பந்தம் கைச்சாத்திடப்படல் தொடர்பாகவும் மலையக அரசியல்வாதிகள் வாக்குகளை கொடுத்தது போல் மக்களுக்கு நிறைவேற்ற வேண்டும் என கோரிக்கை முன்வைத்து அட்டன் எபோட்சிலி தோட்ட தொழிலாளர்கள் 02.11.2015 அன்று காலை கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
ஸ்ரீலங்கா சுதந்திர தொழிலாளர் சங்கத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்த போராட்டத்தின் 100ற்கும் அதிகமான தோட்ட தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.
தோட்ட தொழிலாளர்கள் தொடர்பாக கண்துடைப்பு வேலைகளை கைவிட்டு மலையக அரசியல்வாதிகள் முனைப்புடன் செயல்பட வேண்டும். இன்று தொழிலாளர்கள் விழித்துக் கொண்டிருக்கின்றார்கள் மீண்டும் மீண்டும் ஏமாற்றும் முயற்சியை கைவிரித்துவிட்டு தொழிலாளர்களின் உணர்வை மதித்து அவர்களின் தேவையை பூர்த்தி செய்ய வேண்டும் என போராட்டத்தில் கலந்து கொண்ட தொழிலாளர்கள் கோஷம் எழுப்பினர்.
எதிர்பார்க்கின்ற தீபாவளியை இனிமையாக கொண்டாட வேண்டும் என ஆவலுடன் காத்திருக்கும் தோட்ட தொழிலாளர்கள் அடிவயிற்றில் நெருப்பை கட்டிக்கொண்டு வாழ்க்கை சுமையை எதிர்கொண்டு வருகின்றனர்.
ஆனால் இவர்களின் உணர்வை மதிக்காமல் தொழிற்சங்கவாதிகள், அரசியல்வாதிகள் இழுபறி நிலையில் ஒவ்வொரு சம்பள பேச்சுவார்த்யையும் முன்னெடுத்து செல்கின்றனர். .இந்த நிலை மாற்றப்பட்டு மக்களுக்கு கொடுத்த வாக்குறுதியினை நிறைவேற்ற செயல்பட வேண்டும் என தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்தனர்.