வடபுலத்திருந்து 1990ஆம் ஆண்டுகளில் பலவந்தமாக வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களது பிரச்சினைகள் தற்போது ஐ நா வின் அனுசரணையோடு இலங்கை அரசினால் மேற்கொள்ளப்படவிருக்கும் விசாரணை பொறிமுறையில் உட்படுத்தப்படாமை எமக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தும் விடயமாகும்.
2002 மற்றும் 2009 காலப்பகுதியில் ஏற்பட்ட பிரச்சினைகள் தொடர்பாக இவ் விசாரணைக்குழு கவனம் செலுத்துகின்றது. ஆனால் 1990 களில் பலவந்தமாக வெளியேற்றப்பட்ட வடமாகாண முஸ்லிம்களுக்கு ஏற்பட்ட அநீதிகள் மற்றும் அவர்களுக்கான இழப்பீடுகள் தொடர்பாக எவ்வித முன்னெடுப்புகளும் இல்லாமல் கிடப்பில் போடப்பட்டுள்ள துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளது.
இவ்விடயம் தொடர்பாக நியாயமான தீர்வினை பெற்றுக் கொள்ள இலங்கை அரசையும் ஐ நா அமைப்பையும் ஆவண செய்ய வலியுறுத்தி எதிர்வரும் 04.11.2015 புதன்கிழமை அன்று காலை 9.00 இலிருந்து
பி ப 12.30 வரையில் தென்கிழக்கு பல்கலைக்கழக முன்றலில் ஓர் கவனயீர்ப்பு ஒன்றுகூடல் நிகழ்வினை நடாத்த இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழக முஸ்லிம் மஜ்லிஸ் திட்டமிட்டுள்ளது. இன் நிகழ்வை திறம்பட செய்வதற்கு உங்கள் அனைவரினதும் பூரண ஒத்துழைப்பையும் வேண்டி நிற்கின்றோம்.
எனவே, எமது இரத்த உறவுகளுக்காக குரல் கொடுக்கவும் அவர்களுக்கான தக்க நியாயங்களை பெற்றுக் கொடுக்க மேல் மட்டம் வரை அழுத்தம் கொடுக்கவும் உங்களையும் தாழ்மை மனதுடன் அன்பாய் அழைக்கின்றோம்.
ஏற்பாடு:- முஸ்லிம் மஜ்லிஸ்,
இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகம்.
தகவல்: எம் . ஹனீபா ஹசீன்.