க.கிஷாந்தன்-
200 வருடம் பெருந்தோட்ட பகுதியில் நாட்டின் தேசிய வருமானத்திற்காக உழைத்து லயக்குடியிருப்பில் வாழ்ந்த மலையக தோட்ட தொழிலாளர்களுக்கு கடந்த ஜனவரி மாதம் 8ம் திகதி நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்ற மைத்திரிபால சிரிசேனவினால் முன்னெடுக்கப்பட்ட 100 நாள் வேலைத்திட்டத்தின் கீழ் மலைநாட்டு புதிய கிராமம் மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சர் திகாம்பரத்தின் வேண்டுக்கோள்கினங்க இயற்கை அனர்த்ததால் பாதிக்கப்பட்ட மஸ்கெலியா மொக்கா மிட்லோதியன் தோட்டத்தில் உள்ள 22 குடும்பங்களுக்கான பசும் பொன் வீடமைப்பு திட்டம் நிர்மாணிக்கப்பட்டு “நடேச ஐயர் புரம்“ என பெயர் சூட்டப்பட்டு 11.10.2015 அன்று அமைச்சர் திகாம்பரத்தினால் பசுமை பூமி எனும் காணி உறுதிப்பத்திரத்துடன் மக்களுக்கு கையளிக்கப்பட்டது.
புதிய அரசாங்கத்தில் முதன்முறையாக மலையக தோட்ட தொழிலாளர்களுக்கு அமைச்சர் திகாம்பரம் வழங்கிய தேர்தல் வாக்குறுதியின் அடிப்படையில் முதலாவது வேலைத்திட்டமாக இந்த வீடமைப்பு திட்டம் முழுமையாக பூர்த்தியாக்கப்பட்டு தொழிலாளர்களுக்கு கையளிக்கப்பட்டது.
சகல வசதிகளையும் கொண்ட 7 பேர்ச் நிலப்பரப்பில் பாதிக்கப்பட்ட மக்களிடம் எவ்வித பணமும் அறவிடாமல் வீடுகள் நிர்மாணிக்கப்பட்டு கையளிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக சுமார் பன்னிரண்டு லட்சம் ரூபா செலவில் ஒவ்வொரு குடும்பத்துக்கும் தனித் தனி வீடுகளாக நிர்மாணிக்கப்பட்டுள்ளன. ஒரு வீட்டில் சமயலறை, விராந்தை, 2 படுக்கையறைகள், குளியலறை, மலசலகூடம் போன்ற உட்கட்டமைப்பு வசதியுடன் வீடுகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் குடிநீர் வசதி, மின்சார வசதி போன்ற வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடதக்கது.
இந்த வீடுகள் கையளிக்கும் நிகழ்வில் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.திலகராஜ்,மலைநாட்டு புதிய கிராமம் மற்றும் சமூக அபிவிருத்தி செயலாளர், மத்திய மாகாண சபை உறுப்பினர்களான சோ.ஸ்ரீதரன், சரஸ்வதி சிவகுரு மற்றும் பெருந்தோட்ட மனிதவள பொறுப்பின் தலைவர் வி.புத்திரசிகாமணி பல முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டனர்.